May 29, 2011

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக நேற்று (27ம்‌தேதி) இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.

ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல்நிலை மோசமானதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தத்தில் இருந்த "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இதையடுத்து, உடல்நலம் தேறிய அவர், மீண்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். பார்வையாளர்கள் அவரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தனி வார்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை, அமெரிக்க நிபுணர்கள் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

ரஜினியின் நுரையீரலில் அழுத்தமாக படிந்துள்ள நீர்கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், ரஜினி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர். ரஜினி இருந்த ஆம்புலன்ஸ் வேன், விமானம் வரை செல்ல முதல்வர் ஜெயலலிதா சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்ததால் விமானம் வரை ஆம்புலன்ஸ் சென்றது.

பின்னர் ரஜினி மருத்துவ குழுவினரின் உதவியுடன் விமானத்தில் ஏற்றப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரஜினி சில வாரங்களுக்கு தங்கி சிகிச்சை எடுப்பார் என்றும், அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி வாய்ஸ் : முன்னதாக ரஜினியின் வாய்ஸ் அடங்கிய சிடி ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அவரது மகள் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தார். அதில் பேசிய ரஜினி, நான் உங்க ரஜினிகாந்த் பேசுறேன். நான் நல்லா இருக்கேன்.

யாரும் கவலைப்படாதீங்க. நான் பணம் வாங்குறேன். நடிக்குறேன். அதுக்கு நீங்க என் மேல இவ்ளோ அன்பு செலுத்துறீங்க. உங்களுடைய பிரார்த்தனை, அன்புக்கு கைமாறா என்ன செய்வேன்னு, செய்யப்போறேன்னு தெரியல.

என் பேன்ஸ் எல்லாரும் கடவுள் ரூபத்தில் இருக்குறதா நினைக்கிறேன். உங்க பிரார்த்தனையால சிங்கப்பூர் போயிட்டு நான் சீக்கிரமே, நல்லபடியா திரும்ப வந்து உங்களையெல்லாம் சந்திக்குறேன். உங்க அன்பால தலைநிமிந்து நிற்பேன், என்று கூறியுள்ளார்.

ரஜனியைக் காணாமல் துடித்தார் கமல்


திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகளைத் தாண்டிய நண்பர்கள். தமிழ் சினிமாவின் இரு பெரும் சிகரங்கள். இந்திய சினிமாவுக்கு புதிய கவுரவம் தந்த சாதனையாளர்கள்.

பெயர்களைச் சொல்வதில் கூட இவர்களை பிரித்து உச்சரிக்க முடியாது... இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் தன்னிச்சையாக வரும்... அந்தப் பெயர்கள் ரஜினி - கமல்!

கடந்த ஒரு மாத காலமாக ரஜினி மருத்துவனையில் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காண அத்தனை விவிஐபிக்களும் காத்திருக்கிறார்கள். ஆனால் அனுமதிதான் கிடைத்தபாடில்லை. வெளியிலிருந்து நோய்க் கிருமிகள் ரஜினியைத் தாக்கக் கூடும் என்பதால் சிறப்பு வார்டில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.

மனைவி, மகள்கள், மருமகன் தவிர வேறு யாரும் ரஜினியைப் பார்க்க முடியவில்லை. ஒரு காலத்தில் ரஜினியின் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இருந்து, பின்னர் ரஜினி வழியில் நடிகராகி, இன்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ள விஜயகாந்த் கூட ரஜினியை நேரில் சந்திக்க முடியாத நிலை.

ஐசியுவிலிருந்த ரஜினியை கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு வந்து, "அண்ணன் ரஜினி நலமுடன் இருக்கிறார். திரும்ப பழையபடி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்று உருக்கத்துடன் கூறினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரால் ரஜினியை பார்க்கக் கூட முடியவில்லை. எனவே அவர் ராகவேந்திரர் கோயிலில் ரஜினிக்காக பிரார்த்தனை செய்து, மக்களுக்கு தன் கையால் அன்னதானம் செய்தார். "இன்றைய சினிமாவில் அனைவருமே ரஜினிக்கு ரசிகர்கள்தான். பிறகுதான் நடிகர்கள். எங்கள் அன்புக்குரிய ரஜினி விரைந்து நலம்பெற்று வரவேண்டும்," என்றார்.

இவர்கள் இப்படியெல்லாம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் எழுப்பிய கேள்வி, "கமல் சார் ஏன் இன்னும் பார்க்கவில்லை. அவரை விட உரிமையுள்ளவர் யார் இருக்கிறார்கள்...?" என்றே கேட்டு வந்தனர்.

உண்மையில் ரஜினியைக் காண மூன்றுமுறை கமல் முயற்சித்துள்ளார். ஆனால் அவர் ஒவ்வொரு முறை பார்க்க முயன்றபோதும், ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லது டயாலிஸிஸ் சிகிச்சையில் இருந்ததால், பார்க்க முடியவில்லையாம்.

ரஜினியைப் பார்த்தாக வேண்டும் என லதா மற்றும் ஐஸ்வர்யாவிடம் அவர் சார்பில் கேட்கப்பட்டபோது, இப்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைள் காரணமாக நாங்களே அவரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே மருத்துவர்கள் அனுமதி அளித்ததும் உங்களுக்கு உடனே சொல்கிறோம்," என்று மிகுந்த தயக்கத்துடன் கூறியுள்ளனர்.

'பக்கத்திலிருந்தும் என் நண்பன் ரஜினியைப் பார்க்க முடியவில்லையே... அவரைச் சந்திக்கும் சூழலை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுங்கள்', என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் கலைஞானி.

கமல் 50 என்ற பெயரில் விஜய் டிவி விழா கொண்டாடியபோது, முதல் ஆளாய் அதில் கலந்து கொண்டு கடைசி ஆளாய் வெளியேறி நட்புக்கு மரியாதை செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

விழாவில் தன்னைப் பற்றி ரஜினி பேசியதைக் கேட்டு கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்ட கமல், அவரைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டார். "எவன் சொல்வான் இந்த மாதிரியெல்லாம்... ரஜினி என் உண்மையான நண்பன்... பெருந்தன்மைக்கு சொந்தக்காரர்" என்றெல்லாம் கமல் புகழ்ந்தது நினைவிருக்கலாம்.

SL Army

பறக்கும் கார்

May 25, 2011

தொடரும் மொழிப்போர்...


ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின்ற மொழியை முதலில் அழித்துவிடு" எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற, அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால், அது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அணியப்படுத்திக் கொண்ட கழக இலக்கியங்களும், காப்பியங்களுமே முதன்மைக் காரணமாகும். எத்தனையோ வடிவங்களில் நடைபெற்ற, எவ்வளவோ அழிவுச் செயல்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் மொழியின் தலைநிமிர்ந்த நன்னடை, பெருமைக்குரியதாக இருக்கிறது. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இன்று கணினியில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் தமிழ்மொழியின் வரலாற்று வழித்தடம், அண்மைக் காலம் வரை கரடுமுரடாய்த்தான் இருந்திருக்கிறது. இப்போதும் அது போன்ற தடத்திலேதான் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ்ச்சமூகம், பரந்து பட்ட அளவில் கல்வியறிவு பெற்றிருந்ததை, மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிப்பட்டி புள்ளிமான் கோம்பையில் கிடைத்த நடுகற்கள் சான்றாய் நின்று பகர்கின்றன. கோவையில் கிடைத்த சூலூர் மண் தட்டில் காணப்படும் குறியீடுகளும், சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளும் ஒத்ததாய் அமைந்திருப்பது, தமிழ்ப்பண்பாட்டின் நாகரிகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை உரக்கத் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மேலும் பல வரலாற்றுத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று அறிவுச் செருக்கோடு உலகத்திற்கே வாழ்வியல் எதார்த்தத்தை வழங்கிய தமிழ் மொழி, இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. இதற்கிடையே, நேற்றுப் பிறந்த மொழிகளோடும், அதற்கு முந்தைய நாள் பிறந்த மொழிகளோடும் ஒப்பிட்டு, தமிழின் செம்மொழிப் பெருமையைக் கீழிறக்கும் செயல்களும் நம் கண் முன்னே அரங்கேற்றப்படுகிறது என்பதையும் நாம் கணக்கிலே கொண்டாக வேண்டும்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர் குறித்து இப்போதுள்ள இளந்தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. கல்லூரி மாணாக்கர்கள், போர்க்குணத்துடன் தாங்கள் எண்ணிய இலக்கு ஈடேறுவதற்காக, மண்டை உடைந்து, கை கால் ஒடிந்து, குருதி சொட்ட, உயிர் ஈகம் செய்த வரலாறு, தமிழகத்தின் கருஞ்சிவப்புப் பக்கங்களாகும். 1965ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராய் இருந்த காங்கிரஸ் கட்சியின் பக்தவச்சலம், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தன்னெழுச்சியாய் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, அதில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கதறக் கதற லத்தியால் அடித்த அடியை எவராலும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அன்று அடி வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் இன்று திராவிடக் கட்சிகளின் பல்வேறு பொறுப்புகளிலும், பல தமிழ்த் தேசிய அமைப்புகளிலும் வாழும் சான்றாக தற்போதும் உயிருடன் இருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா தலைமையில் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம், அப்போது மொழியுணர்வோடும், இனவுணர்வோடும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நாடு விடுதலையடைவதற்கு முன்பாக அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த இராஜகோபாலாச்சாரியார், 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் முதன் முதலாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ மற்றுமுள்ள தமிழறிஞர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தொண்டர்களும், தலைவர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் திரண்டனர். இதற்கிடையே முதலமைச்சரின் வீட்டிற்கு முன்பாக உண்ணாநோன்பிருந்த பல்லடம் பொன்னுசாமி என்பார் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முதல் நபராகக் கைதானார். அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் இந்தி மொழி எதிர்ப்பிற்காக நடராசன் கைது செய்யப்பட்டார். சிறையில் கடும் தாக்குதலுக்கு ஆளான நடராசன், 1939ஆம் ஆண்டு சனவரி 15ஆம் நாள் இறந்துபோனார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் ஈகம் செய்த முதல் போராளி இவர். தர்மாம்பாள், நாராயணி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட பெருமளவிலான பெண்களும் இப்போராட்டத்தின் விளைவாக கைது நடவடிக்கைக்கு ஆளாயினர்.
இந்தித் திணிப்பிற்கு ஆதரவான அரசின் முயற்சிகளுக்கு 1938ஆம் ஆண்டு இராஜாஜி வித்திட்டாரென்றால், அதற்கு எதிரான போராட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் இறந்துபோன நடராசனின் இறப்பை இராஜாஜி, பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்தார். இரண்டாவது மொழிப் போராட்டமாய்க் கருதப்படும் 1948ஆம் ஆண்டிலும் அதே காங்கிரஸ் அரசு, முதல்வராய் அமர்ந்த ஓமந்தூர் இராமசாமி மூலம் இந்தித் திணிப்பை மேற்கொண்டது. அப்போதும் பெரியார் தலைமையில் அறிஞர் அண்ணா, திரு.வி.க., பாரதிதாசன், தருமாம்பாள் என பல்வேறு தலைவர்களும், அறிஞர்களும் போராட்டங்கள் பல நடத்தி சிறை புகுந்தனர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியா தனக்கென்று அரசியல் அமைப்பை உருவாக்க முடிவு செய்தது. இதற்கென்று உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக் குழு இந்தியாவின் ஆட்சி மொழி குறித்த கலந்துரையாடலை 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தியது. அரசியலமைப்பு அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், தனியே நடத்திய கூட்டத்தில் ஆட்சி மொழி வாக்கெடுப்பை நடத்தினர். இதில் இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும், ஆங்கிலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமய்யர் தனது ஓட்டை இந்திக்கு ஆதரவாகப் பதிவு செய்ததால் ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி மொழி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தி மொழியை, அதனைப் பேசாத பிற மாநிலங்களில் திணிப்பதற்கு காங்கிரஸ் பெரும் முயற்சி எடுத்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் விரும்பாத நிலையில் இந்தித் திணிப்பு விரைவுபடுத்தப்பட்டது. 1950 சனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 17ஆவது பிரிவின் கீழ் இந்தி, நடுவணரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போரில் முளைத்த திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து பல்வேறு பேராட்டங்களை நடத்தியது. அக்கட்சியின் இதழ்களிலும், வேறு பல ஏடுகளிலும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் மக்களவையில் பிரதமர் நேரு, "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும்" என்று உறுதியளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக மூன்றாவது மொழிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் 1963ஆம் ஆண்டிலிருந்து 1965ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நான்காவது மொழிப்போர், இரத்தம் சிந்திய போராட்டமாக அமைந்துவிட்டது. அப்போதும் காங்கிரஸ் கட்சியே இந்தித் திணிப்பை முன்னெடுத்தது. நடுவண் உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 1963ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் நாள் கொண்டு வந்த ஆட்சி மொழி குறித்த சட்ட முன்வரைவு, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பின. இதன் விளைவாக ஒட்டு மொத்த தமிழகமே கொந்தளித்தது. அண்ணா தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் பரவின.
கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்தித் திணிப்பிற்கு எதிரான பெரும் போரில் சிறிதும் தயக்கமின்றி குதித்தனர். காங்கிரஸ் தலைமையிலான பக்தவச்சலம் அரசு மிக மோசமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டது. தமிழகக் காவல்துறை, மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்தத் காங்கிரஸ் தொண்டர்களைத் தயார் செய்து, ஆங்காங்கே மாணவர்கள் மீது உருட்டுக் கட்டைகளால் தாக்கியது என வரலாறு காணாத அளவில் பெரும் வன்முறைக் காடாக தமிழகத்தை மாற்றிக் காட்டியது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்த நெடும் போராட்டத்தில் தான் வெறும் 21 வயதே ஆன கீழப்பழுவூர் சின்னச்சாமி, திருச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க!" என்று முழக்கமிட்டு, தன் உடலுக்குத் தீ வைத்துக் கொண்டு இறந்து போனார்.
மதுரையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில், திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிய காங்கிரஸ் அரசு, மாணவர்களை ஓட, ஓட அடித்து விரட்டியது. அதில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். 1965 சனவரி 26ஆம் நாள் சிவலிங்கம் என்ற திமுக தொண்டர், சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்து இறந்து போனார். மொழிக்காக உயிரை ஈந்த இத்தியாகப் போராட்டத்தை பக்தவச்சலம், சட்டமன்றத்தில் மிக இழிவாகப் பேசினார். பிறகு பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் தீக்குளித்து இறத்தல் தொடர்கதையாகின. 1965ஆம் ஆண்டு ஐம்பது நாட்கள் நடைபெற்ற நான்காவது மொழிப் போராட்டத்தில், காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்ட வன்முறையின் காரணமாய் சற்றேறக்குறைய 500 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் அனைத்தையும் அப்போதிருந்த இளைஞர்களும், மாணவர்களுமே பெரும் எழுச்சியோடு நடத்தினர். நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து தமிழ் மொழியைக் காப்பாற்றினாலும் கூட, நடுவணரசின் மறைமுக வேலைத்திட்டமும், மாநிலக் கட்சிகளின் கையாலாகாத்தனமும் இந்தியை கொஞ்சம், கொஞ்சமாய் தமிழகத்திற்குள் தற்போது கொண்டு வந்து கொண்டிருக்கிறது. "அனைவருக்கும் கல்வி" என்பதைக் காட்டிலும் "சர்வ சிக்ச அபியான்" வெகு இயல்பாக புழங்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள நடுவண் அரசின் அனைத்துத் துறைகளும் இந்தியை மெல்ல மெல்ல புகுத்தி வருகின்றன. நடுவண் அரசின் காப்பீட்டுத் திட்டங்களும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்தித் திணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அறிஞர் அண்ணா, "மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக எப்போது அறிவிக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்த மொழிப்போர் முடிவிற்கு வரும்" என்றார். அந்த நிலை அய்யாவால் சாத்தியமாகுமா..? அல்லது அம்மாவால் சாத்தியமாகுமா..? என்பது இன்னமும் விளங்காத புதிர்.
மொழிப் போராட்டத்தை கையிலெடுத்து, ஆளும் உரிமையைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் மொழி, இன உணர்வைக் காப்பாற்ற தன்மரியாதையோடு செயல்படத் தொடங்கும் நாள் எந்நாளோ? இரு கழகங்களின் ஆட்சியில் தான் ஆங்கில வழியிலான நர்சரிப் பள்ளிகள் வெகு வேகமாக வளர்ந்தன. தமிழ் உரையாடல்கள் அவ்வப்போது தலைகாட்டும் வண்ணம் தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சி விரைவடைந்ததும் கழகங்களின் காலத்தில்தான். தற்போது கிரந்த எழுத்துக்களைக் கொண்டு தமிழ்மொழியின் கணினிப் பயன்பாட்டு வளர்ச்சியைத் தடை செய்கின்ற முயற்சியும் திமுகவின் காலத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையே தமிழ் மொழியை உச்சரிக்கும் திறனற்று, ஆங்கில மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் மனநிலையை ஊக்குவித்தது திமுகவும் அதன் அரசியல் எதிரியான அதிமுகவும்தான்.
தமிழ்வழியில் பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற திமுக அரசின் அறிவிப்பிற்கு நீதிமன்றம் சென்று தடையாணை பெறுகின்ற அளவிற்கு தமிழ் மொழிக்கெதிரான செயல்பாடுகள் அப்பட்டமாகவே தமிழகத்தில் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் தமிழகத்தை ஆளுகின்ற, ஆளப்போகின்ற கழக அரசுகள் என்ன சொல்லப் போகின்றன? அண்டை மாநிலங்களான மராட்டியமும், கன்னடமும், மலையாளமும் தனது தாய்மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் பங்காற்றுகின்ற போது, தமிழகத்தால் மட்டும் இயலாமற்போனது ஏன்? மொழி வழி தேசியம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டு, அண்டைத் தேசிய இனங்கள், அதனதன் மாநிலத்திற்குள் ஒன்று சேரும்போது தமிழகத்தில் மட்டும் அவ்வாறு இயலவில்லையே என்ன காரணம்? முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற உயிராதாரச் சிக்கல்களில் கூட தமிழர்களால் ஒன்று பட இயலாமற் போனதற்கு யாரைக் குற்றம் சாட்டுவது? இவையனைத்திற்கும் காரணம் தன்னல அரசியலன்றி வேறு எது?
முதல் பத்து இடத்தில் தமிழ்மொழி!
உலகின் மிகப் பிரபலமான அகரமுதலிகளுள் முதன்மை இடத்தை வகிக்கும் விக்கி அகரமுதலி தனது அடையாள முத்திரையில் தமிழையும் இடம் பெறச் செய்துள்ளது. தற்போது விக்கி அகரமுதலியில் (http://www.wiktionary.org/) மட்டும் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் சொற்கள் இடம்பெற்று முதல் பத்து இடங்களுக்குள் தமிழ் இடம் பெற்றுள்ளது (http://meta.wikimedia.org/wiki/Wiktionary#Statistics). இந்திய மொழிகளுள் எவையும் இந்த இடத்தைப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பேச உறுதியேற்போம்!
இன்று கணினியில் தமிழ் கோலோச்சுவதற்கு புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களும், ஈழத் தமிழர்களுமே மிக முக்கியக் காரணம். மொழிப் போராடத்தை தீவிரமாக நடத்திக் காட்டிய தமிழ் மண்ணில் பிறந்தோர் தற்போது ஒரு சொற்றொடரைக் கூட முழுமையாகத் தமிழில் பேச இயலவில்லை. இதற்கெல்லாம் காரணம் நம்மை ஆளுகின்ற அரசுகளின் பலவீனமே! இந்தி மொழிப்போர் ஈகியர் நாளிலாவது நாம் அனைவரும் தாய்மொழியில் உரையாட உறுதியேற்போம்.

இந்த நாட்டின் உயிர் அதன் ஊர்களில் துடித்தது. மனிதர்கள், அவர்களோடு துள்ளிவரும் ஆடு மாடுகள், நாய் பூனைகள். மரங்களும் பயிர்களும் செழித்த வயல் வெளிகள். மரவெளியின் பறவைகள். சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பாம்புகள், பூரான்கள் என எத்தனைப் பூச்சிகள், உயிர்வகைகள். கண்ணுக்கு தெரிகிற தெரியாத அத்தனை உயிர்வகைகளையும் தாயாய் அரவணைத்து மகிழ்ந்து கோடிக்கணக்கான அத்தனை உயிர் வகைகளுக்கும் உணவூட்டி மகிழ்வித்தவள் இந்த இயற்கை அன்னை. ஆனால் இயற்கை அன்னை இன்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாள். எப்படி?
அறக்கட்டளை என்ற பெயரில் நடந்த உளவும் பசுமைப்புரட்சியும்
நாடு 1950இல் குடியரசானது. 1952இல் நாட்டில் நுழைந்தது இராக்பெல்லர் அறக்கட்டளை, போர்டு அறக்கட்டளை என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் இரண்டு தனியார் அமைப்புகள். இந்திய வேளாண்மை பற்றி நாடு முழுவதும் ஆழ்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டன. அமெரிக்க வேளாண் பண்ணைகள், கால்நடைப் பண்ணைகள் ஆகியவற்றைக் காண அரசியல் வாதிகள் அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வேளாண் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கவும், உதவித் தொகையுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்க அறக்கட்டளைகள் வேளாண் பல்கலைக் கழகத்துடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டன. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெறத் தேர்ந்தெடுக்கபட்ட பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஊடகங்கள் தீவிர வேளாண்மைப் பற்றியும், அமெரிக்கப் பண்ணைகளில் எந்திரமயம் மூலம் நடக்கும் அதிசயங்கள் பற்றியும் குளிரக்குளிரப் பாடின. அமெரிக்காவில் நடக்கும் அதிசயம் பற்றிக் கண்டு களித்து வந்த அரசியலர் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். அமெரிக்க உதவியுடன் படித்து பட்டம் பெற்று வந்தவர்கள் 'அறிவியலின் அற்புத சாதனைகள்' பற்றி ஆணித்தரமாகப் பேசினார்கள். அறக் கட்டளைகள் 15 ஆண்டுகளையும் கோடிக்கணக்கான ரூபாய்களையும் கொட்டிச் செய்த ஆய்வுகள் என்ன தெரியுமா?
(1) குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செய்து மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது
(2) உழவர்களின் பயிரிடும் முறையை மாற்றி இரசாயன உரங்கள், மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பது. 1965, 1966 ஆகிய ஆண்டுகளில் பருவ மழை சரியில்லை. உடனே பெரிய பிரசாரம் தொடக்கப்பட்டது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் பட்டினிக் கொடுமைகளும் பெரிய அளவில் நிகழ உள்ளதாக வதந்திகள் பரப்பபட்டன. வர இருக்கும் கொடுமையான பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய அரசு அமெரிக்க அரசினர் 'பசுமைப் புரட்சி" என்ற பெயரில் பரிந்துரைக்கும் அதீத இரசாயன வேளாண்மையைக் கைக்கொள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தது. அப்போதைய வேளாண் அமைச்சர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
காடுகளின் அழிவு
காலனி ஆதிக்கத்தின் போது மலைகளில் இருந்த உயரமான மரங்கள் வெட்டப்பட்டு காப்பி, டீ, இரப்பர் மற்றும் மணப் பொருட்கள் பயிரிடப்பட்டன. இதனால் மலைப்பரப்பில் இருந்த பெரிய சூரிய அறுவடைப் பசுமை அழிந்தது. பெய்யும் மழை அளவும் குறைந்து போனது. அதீத நில அரிமானம், நிலச்சரிவு போன்றன மலைகளின் வளமையைக் குறைத்தன.
தோட்டங்கள் போக எஞ்சியுள்ள காடுகளும் முறையாக காக்கப்படாமல் திருட்டு மர வணிகர்களால் அழிந்து வருகின்றன. சட்டவிரோதமான முறையில் காட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவதும் காடுகளின் பரப்பளவைக் குறைக்கின்றது.
பல்வகையான செடிகொடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், சிற்றுயிர்கள், நுண்ணுயிர்கள் என விரிந்து பரவும் உயிரினங்கள் ஈடு செய்ய முடியாத செல்வங்கள். இவற்றின் அருமை புரியாதவர்களாய் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
ஆற்றுப் படுகைகள்
செழுமையான மழை, காடுகளின் கனத்த உலர்சருகு மற்றும் மக்குகள் வழியே வழிந்தோடும் போது மக்கு உரங்களைத் தன்னோடு எடுத்துச் செல்கின்றது. மழை நீர் ஆறுகளின் வழியே ஓடி படுகைகளில் சுமந்து வந்த உரங்களைப் படியச் செய்கின்றன. படுகைகள் இவ்வாறாக ஊட்டச் சத்துக்கள் பெறுகின்றன. ஆனால் இன்றோ காடுகள் குறைந்து போன நிலையில் மழையும் குறைந்தது. மக்குகளும் குறைந்தன. இருக்கின்ற மக்குகளும் கட்டப்பட்டுள்ள குறுக்கணைகளில் சிறைப்பட்டு விடுகின்றன.
மானாவாரி நிலங்களை ஒதுக்கிய பசுமைப்புரட்சி
15 ஆண்டுகளாக இந்தியாவை ஆய்வு செய்த அமெரிக்க அறக்கட்டளைகள்
1967இல் 'பசுமைப் புரட்சி' பற்றிய அறிவிப்புடன் வளமிக்க, நிறையத் தண்ணீ­ர் வசதியுள்ள நதிப் படுகைகளில் புதிய குட்டை இரக நெல், கோதுமைப் பயிர்களைப் பயிரிடத் தொடங்கி வங்கிக் கடன், கொள்முதல் நிலையங்கள் என அரசின் கவனம் இரண்டு பயிர் வகைகளைத் தாங்கிப் பிடித்தன. ஆனால் நாட்டின் 75 விழுக்காடு மானாவாரி நிலங்கள் பசுமைப் புரட்சியின் வளையத்திற்கும் கொண்டு வரப்படவில்லை. மானாவாரிப் பயிர்களுக்குக் கொள்முதல் நிலையங்களும் இல்லை. புறக்கணிக்கப்பட்ட இந்தப் பகுதியில் விளையும் சிறுதானியங்கள் என அழைக்கப்பட்ட புன்செய் தவசங்கள்தான் மிகுந்த சத்துகள் கொண்டது. நாட்டின் அனைத்து மக்களின் உணவுக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியது. மழைநீரை முறையாகச் சேமிக்கத் தமிழ் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரி குளங்களை நன்கு பராமரித்து உழவர்களுக்கான ஏந்து திட்டங்களை நடத்த அரசு தவறியது.
அறிவியல் சாதனை என்ற பெயரில் வணிகச் சூது
வேளாண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பட்டறிவு கொண்ட சமுதாயத்தின் நடைமுறைகள் பத்தாம்பசலித்தன மானவை என்று மக்களை நம்ப வைத்துப் பரந்த நாட்டின் உழவுத் தொழிலின் இடுபொருட் சந்தையைப் பன்னாட்டுக் குழுமங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது பசுமைப் புரட்சி. உரம், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், விதைகள், பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி, ஆழ்குழாய்க் கிணறுகள், நீர்மூழ்கி மின் இறைவைகள், நெகிழிக் குழாய்கள், சொட்டு நீர்ப் பாசனக் கருவிகள், உழுபடை எந்திரங்கள், கதிரடிக்கும் எந்திரங்கள், கதிர் அறுக்கும் எந்திரங்கள், நடவு எந்திரங்கள் போன்ற வணிகப் பெருக்கத்திற்கு வழிகோலிய பசுமைப் புரட்சியின் அடிப்படைகள் வேளாண் அறிவியலுக்கு அறவே விரோதமானவை. இந்த வணிகச் சூதிற்குத் துணைநின்ற அரசியலர், வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் பட்டதாரிகள் இந்த நாட்டிற்கும் உழவர்களுக்கும் செய்த துரோகம் கண்டிக்கத்தக்கது.
வேதியல் உரங்களின் கேடு
மண் என்பது பயிர்களின் வேர்த் தொகுதியைத் தாங்கி நிற்கும் இடம் மட்டுமே என்றும் பயிர்களுக்கான ஊட்டங்கள் தாங்கள் பரிந்துரைக்கும் வேதியல் பொருட்களில்தான் உள்ளதாகவும் பசுமை வணிகத்திற்கு விலைபோனவர்கள் கூறுவது அறவே அறிவியலுக்கு முரணான பொய்.
கோடானுகோடி உயிர்களின் தாய் மண். போட்டியும் ஒத்துழைப்புமாகச் செழிக்கும் இந்த உயிர்கள் ஒரு சங்கிலி போல. தனித்தன்மை கொண்ட இந்த உயிர்கள் நடத்தும் கூட்டுவாழ்வில்தான், உயிர்ப் பன்முகத் தன்மையில்தான் உயிர்களின் இருப்பும் நீட்டிப்பும் உள்ளன. இயற்கை அன்னை பெரிய உணவுக்கிடங்குகள் கட்டி, எல்லா உயிர்களுக்கும் தினந்தோறும் உணவு பங்கீடு செய்வதில்லை. ஒன்றன் கழிவு மற்ற உயிரின் உணவு என்பதுதான் இயற்கையன்னையின் உணவு நியதி. உயிர்ப் பன்முகத் தன்மைதான் உணவுப் பங்கீட்டின் விதி. இந்த இரண்டு அடிப்படை உண்மைகளையும் புறக்கணித்து இயற்கையை நாசப்படுத்தியது பசுமைப் புரட்சி.
இட்ட வேதியல் உரங்களில் பெரும்பகுதி பயிரால் உறிஞ்சப்படுவதில்லை. அது நிலத்தடி நீரிலும் வடிகால் நீரிலும் கரைந்து பரவி சூழற் கேடாக மாறுவதோடு நிலத்தின் சிற்றுயிர் நுண்ணுயிர்களையும் அழிக்கின்றது. இயற்கையின் இருப்பாக இருக்கும் சங்கிலி வளையக் கண்ணிகளை உடைப்பது பல தொடர்விளைவுகளை உண்டாக்க வல்லது. இது பற்றிய உண்மைகளை அறவே மறைத்தனர் பசுமைப் புரட்சியின் காவலர்கள்.
பூச்சிக் கொல்லி - களைக் கொல்லிகளின் கெடு
பூச்சி - களைக்கொல்லிகள் கடுமையான நச்சுப் பொருட்கள். பூச்சிகளை மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் கொல்லும் அபாயமான வேதியல் பொருட்கள். இயற்கையில் வாழும் எந்த உயிரினமும் இதனை உள்வாங்கிச் செரிக்க முடியாது. நல்ல பாம்பின் விசத்தைக் கூட நம்மால் செரித்து விட முடியும். மேலும் இயற்கையாலும் சிதைக்கவோ மக்க வைக்கவோ முடியாத இந்த நச்சுகள், நீர், மண் வழியாகப் பரவி, உண்ணும் உணவில் உறிஞ்சப்பட்டு மனித உடலின் கொழுப்பில் கரைந்து செமிக்கப்பட்டு மனிதர்களுக்குக் கடும் நோய்களை உருவாக்குகின்றன. இன்றைய நிலையில் பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் உயிர் இழப்பும் பொருள் இழப்பும் பன்மடங்காகப் பெருகியுள்ளன. பன்னாட்டுக் குழுமங்கள் ஆய்வுக் கருவிகள், மருந்துகளையும் விற்க மேலும் ஒரு புலம் உருவாகியுள்ளது.
மண், நீர், சூழல், உண்ணும் உணவு நஞ்சானது
தன்னுள் கலந்த அன்னியப் பொருட்களைச் செரித்து உள்வாங்கும் மண்ணும் நீரும் அளவு கடந்து கொட்டப்படும் செரிக்க முடியாத நச்சுகள், நெகிழிகள் போன்றவற்றால் மூச்சுத் திணறுகின்றன. காற்றில் விடப்படும் அதீதப் புகைகள் வளிமண்டலத்தையே மாசுபடுத்தி சூழல் விபத்தாக உருவெடுக்கின்றன. கொடும் சூறாவளிகள், பெருவெள்ளங்கள், புயல்கள், உயரும் கடல்மட்டம் என மனித குலத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் நிலையில் உள்ளன. மாசுபட்ட காற்று, நீர், மண் ஆகியன உண்ணும் உணவை நஞ்சாக்குகின்றன. இவை போதா என்று உலகை ஆதிக்கம் செய்யச் சதி செய்யும் மான்சாண்டோ குழுமம் பரப்பும் மரபீனி மாற்று விதைகளால் மனித உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு பயங்கரமாக இருந்து வருகிறது.
இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மிக்க ஆர்வத்துடன் இந்திய அரசுக்கு உதவிய அமெரிக்கக் கட்டளைகள் மனித அலைகளை மட்டுப்படுத்தத் திட்டங்களைச் செயல்படுத்தின. மறைமுகமாகக் கொல்லும் பூச்சிக் கொல்லிகளும் மக்கள்தொகையைச் சத்தமின்றி குறைக்கின்றன.
பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், மனிதர்களைத் தாக்கும் நோய்கள்
பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள் புழு பூச்சிகளை உண்ணும் பூச்சிகளையும் கொல்கின்றன. பூச்சிகளைத் தின்று வாழும் பறவைகளையும் பாதிக்கின்றன. பயிர்களைத் தின்னும் பூச்சிகள், அவற்றை உண்ணும் மனிதனுக்கு நன்மை செய்யும் பூச்சிகள், மக்க வைக்கும் உயிரிகள், பறவைகள் ஆகிய பல்வகை உயிரினங்களுக்கு இடையே உள்ள இயற்கைச் சங்கிலி உறவை அழிக்கின்றன. சமநிலை அற்றுப்போன இயற்கையில் பூச்சிகள் கடுமையாக வளர்வதைத்தான் காண்கிறோம். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு பூச்சிகளின் வளர்ச்சியில்தான் முடிந்துள்ளது. இத்தகைய ஒரு பாதகத்தைச் செய்தவர்கள் நுண்ணறிவும் தொலைநோக்கும் சிறிதும் இல்லாத மனிதநேயமே அற்ற வணிகர்கள் என்பதே தெளிவாகிறது.
வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகள் பாரம்பரிய முறையில்...
கரிகாலன் கட்டிய கல்லணையும் பாசன வாய்க்கால்களும் இராசேந்திர சோழன் அமைத்த வீராணம் ஏரியும் ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் உயிர்காக்கும் அமைப்புகளாக நிற்கின்றன. தமிழ் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகள், குளங்களை விட கடந்த ஆயிரம் வருடங்களில் செய்யப்பட்ட பெரிய முன்னேற்றங்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது.
மன்னர் கால நீராதாரங்களின் மீது நடத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இக்கால மன்னர்கள், மீட்க வேண்டும். பொதுப் பயன்பாட்டுக் குளங்கள் மழை நீர் சேகரிப்பு, நீர் சிக்கனம், இயற்கைமுறையில் நீர்த் தூய்மை, மறு சுழற்சி ஆகியவைகளுக்கு நம் முன்னோர்களின் நிலைத்த, நீடித்த வாழ்முறைக்குச் சான்றுகள். மின்சக்தியை மையப்படுத்தும் நீர்ப் பயன்பாட்டு முறைகள் நீடிக்க மாட்டா. இப்பொழுதே நம் மின் நிலையங்களுக்கு வேண்டிய நிலக்கரியை ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆப்பிரிக்க நிலக்கரியும் வறண்டு போனால் என்ன செய்வது? ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகள் பசுமைப் புரட்சிக் காலத்தில்
ஆறுகளைச் சிறைப் பிடிக்கும் அவலக் காலம் இது. அவற்றை மீட்க அனைத்து வகையிலும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு வடிநிலத்திலும் மழைநீர் வெளியேறி ஓடுவதைத் தடுத்து ஏரி, குளங்களில் தேக்கவும், நிலத்தடி நீராகச் சேமிக்கவும் தேவையான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும். குறைந்து கொண்டே போகும் நிலத்தடி நீர்மட்டமும், நிலத்தடி நீரில் அதிகரிக்கும் அதீத உப்பும் மனித உடல்நலனையும், வேளாண்மையையும் அச்சுறுத்தும் பெரிய சக்திகள். இதனை வெல்ல மழைநீர் சேகரிப்பும் நிலத்தடி நீராக உட்புகுத்தலும் இன்றியமையாதவை.
ஏற்கெனவே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், போத்தல் நீர் வணிகம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் இந்தியாவை பெருஞ்சந்தையாக்கக் துடிக்கின்றன.
உயர்ந்துபோன இடுபொருட்களுகளும் சக்தி உள்ளீடுகளும்
பசுமைப் புரட்சி கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துப் பாரம்பரிய வேளாண்மையைப் பின்னுக்குத் தள்ளி விட்டது. உரம், பூச்சி, களைக் கொல்லி, விதைகள், பயிர் ஊக்கிகள், எந்திர உழவு, நடவு, அறுவடைச் செலவுகள் என இடுபொருட்செலவுகளை உழவனின் தலையில் சுமத்தியுள்ளது. உழவுத் தொழிலுக்கான பெட்ரோல், டீசல், நிலக்கரி, மின்சாரம் ஆகிய தேவைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. அரசாங்கம் உரக் கம்பெனிகளுக்கு தரவேண்டிய மானியம, சொட்டுநீர் கருவிகள் போன்ற இதற மானியச் செலவுகள், மின்சார நிலையங்கள் அமைக்கத் தேவையான முதலீடுகள், உள்கட்டுமானங்கள் என தேவைகள் விரிவாக்கப்படுகின்றன. பல்வேறு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆடுகளம் அமைப்பது அரசின் வேலையாகப் போய் விட்டது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய உழவன் செலவிடும் தொகை, அரசு செலவினங்களின் தொகை ஆகியவைகளை தொகுத்து வெளியிட அரசு முன்வருமா? உழவனின் உற்பத்திக்குக் கிடைக்கும் விலை நியாயமில்லை என்பதை அரசு உணருமா?
இடுபொருட்களில் உழவர்களை உறிஞ்சும் பன்னாட்டுக் குழுமங்கள், உழவனின் விளை பொருட்களுக்குரிய விலையை எப்போதும் குறைத்தே வைத்துள்ளன.
பன்னாட்டுக் குழுமங்களின் வேட்டைக் காடு
உழவர்கள்தாம் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளால் பெருத்த நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். அறுவடைக்குப் பின் பதப்படுத்தல், உணவுப்பொருட்களின் கொள்முதல், சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் வால்மார்ட், ஏடிஎம் போன்ற உலகமகா நிறுவனங்கள் குதிக்கின்றன. விதைத் துறையில் இந்திய உழவுத் தொழிலையே தன் காலடியில் கொண்டுவர மான்சாண்டோ நாட்டைச் சுற்றிவளைக்கின்றது. சக்திகள் துறையில் பல்வேறு நிறுவனங்கள். உழவனின் நிலங்களைக் கையகப்படுத்தச் செயல்படும் நிலத் திமிங்கலங்கள். மொத்தத்தில் இந்தியா சூழப்பட்ட ஒரு வேட்டைக்களமாகியுள்ளது.
அழியும் வேளாண்மை, புலம்பெயரும் உழவர்கள், குறையும் உற்பத்தி
உழவு சுமக்க முடியாத ஒரு தொழிலாகி விட்டது. வளமான நிலங்களில் கூட உழவு கட்டுப்படியான ஒரு தொழிலாக இல்லை. உழவுத் தொழிலாளிகள் தொடர்ந்து சிறு பெரு நகரங்களுக்கும், திருப்பூர், கேரளா என்றும் சென்ற வண்ணம் உள்ளனர். ஊரில் எஞ்சும் தொழிலாளர்களை 100 நாட்கள் வேலைத் திட்டம் என்ற பெயரில் அரசாங்கமே முன்னின்று உழவுத் தொழில் சாராத வேலைகளுக்கு திருப்புகின்றது. முக்கியமாக உழவுப் பணிகள் மும்முரமாக நடக்கும் நேரத்தில் தொழிலாளர்களை மடைமாற்றுவது உழவுத் தொழிலைக் கொல்லும் ஓர் முயற்சியாக உள்ளது. 100 நாட்கள் வேலையை அரசு கொண்டுவந்த பிறகு வேலைத்திறன், ஒருவர் செய்யக் கூடிய வேலையின் அளவு பற்றிய கருத்துக்கள் உழவனுக்கு எதிராக உருவெடுக் கின்றன. ஆனால் கூலி மட்டும் உயர்ந்து கொண்டே போகின்றது. உழவடைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத உழவன் செய்யும் உழவு வேலைகளைச் சுருக்கிக் கொள்கின்றான். நிலங்களைத் தரிசு போடுவது, நிரந்தரப் பயிர்களாக மாற்றுவது, ஆடு மாடுகள் வளர்ப்பதைக் குறைத்துக் கொள்வது, கட்டுமனைகளாக மாற்றி விற்று விடுவது, குத்தகைக்கு விட்டுவிட்டு நகர்நோக்கிச் செல்வது போன்ற போக்குகள் உழவர்கள் மத்தியில் வளர்கின்றன.
இவையனைத்தும் வேளாண் பொருள் உற்பத்தியின் அளவு, பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கடுமையாகப் பாதிக்கின்றன. நாடு உணவு நெருக்கடியை நோக்கித் தள்ளப்படுகின்றது. ஆள்வோர் உழவர்களின் குரலைப் பொருட்படுத்துவதாக இல்லை.
பசுமைப் புரட்சியின் தோல்வியும், அமெரிக்காவின் புதிய பசப்பல்களும்
அமெரிக்காவோடு ஊடாடி மன்மோகன் சிங் பேசும் இரண்டாவது பசுமைப் புரட்சி, அதிபயங்கரமான ஒன்று. நாட்டின் எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களை அழித்து நூறு கோடி மக்களைக் கொத்தடிமைகளாகப் பன்னாட்டுக் குழுமங்களின் தொழுவத்தில் கட்டும் பெரும் சூது.
இயற்கை வேளாண்மை மூலம் இயற்கையின் சக்திகளை மீட்டெடுப்பதும், மழைநீர் சேகரிப்பும்தான் சரியான மாற்றுத் திட்டம். மரங்களையும் கால்நடைகளையும் பெருக்குவதே தேசிய பெருங்கடமை என நாம் கொள்ள வேண்டும்.
மரபீனி மாற்று மான்சாண்டோவின் கொடுஞ்சூது
மானசாண்டோவைப் புறக்கணிப்போம். நாட்டின் விடுதலையைக் காப்போம்.சிதைந்து போன உட்கட்டமைப் புகளைப் புனரமைப்போம். மேன்மைப் படுத்துவோம்.மண், நீர், காற்று, சூழல் தூய்மை காப்போம்.சுயசார்பு ஊரகங்களைக் கட்டுவோம். ஊரக மக்களின் தேவைகளை அவர்களே உற்பத்தி செய்ய வழிகாண்போம்.

தமிழக உழவர்களின் சாதனை உலகையே குலுக்கட்டும். உழவன் விடுதலை உலகின் விடுதலை!

காதல்

இது இலையுதிர்காலம் என்றாலும்
இருக்கை மட்டும் காத்திருக்கிறது...
காதலர்களின் வருகைக்காக

மனைவி இறந்ததற்காக
கணவன் கட்டிய வெள்ளைப்புடவை தான்
தாஜ் மஹால்

எறும்பு ஊற பாறையும் தேயும்..
அவள்
பாறையாய் இருக்கும் வரை
என் காதல் கூட
'எறும்பு' தான்

எத்தனையோ
காதலர்களை சுமந்த
காதலர்களின் கருவறையாய்
பேருந்துகள்

ராஜராஜ சோழன் - பிரமிப்பும், கேள்விகளும்!


நமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் மதிப்பெண்களுக்காக "சோழர் வரலாறு" படித்ததோடு சரி.
பதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பி.இ., படிப்பும் இல்லை... எம்.இ., படிப்பும் இல்லை... பெற்றோரது அடிவயிற்றில் கட்டியிருக்கும் பணத்தைக் கூட அடித்துப் பிடுங்கும் பொறியியல் கல்லூரிகளும் இல்லை... அப்புறம் எப்படிக் கை வந்தது இந்தக் கலை? அதுதான் பட்டறிவுக்கும் பாட அறிவுக்கும் உள்ள வேறுபாடு. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மக்களது அயராத உழைப்பும்... தொழில் நுட்ப அறிவும்... கலை நயமும்தான் இன்று அது விண்ணுயர எழுந்து நிற்கக் காரணம். கூடவே மன்னனது ரசனையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கும்தான்.
சரி... இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்... வழிபாட்டுத்தலங்கள்... சிற்பங்கள்... ஓவியங்கள்... அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?
"மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?" எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா? அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்கத் துணை நின்றார்களா? இதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.
தஞ்சை பெரிய கோயில் கம்பீரமாக நிற்கிறது வெளிப்புறத்தில். ஆனால் மக்கள் வழிபாடு நடத்துவதற்கும்... வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா உட்புறத்தில்? இல்லை... இல்லை... இல்லவேயில்லை! என்கின்றன சோழர் காலத்திய கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.
சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப் பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது? அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது? பெண்களது நிலை எவ்வாறு இருந்தது? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? இதுவெல்லாம் முக்கியமில்லையா நமக்கு?
சரி... மக்கள் எப்படி இருந்தார்கள்? அதை முதலில் பார்ப்போம். சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காவிரி ஆற்றின் தென் கரையில் இருந்த இரு ஊர்களை தங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்கள் அதிர்ந்து போனார்கள். ஊரே சாதியால் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.
ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி சோழப் பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இடுகிறான். அதன் பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளர பொன்னையும் பொருளையும் நிலத்தையும் தானமாக அள்ளி வழங்குகிறார்கள். எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டும். இதனை துல்லியமாகப் போட்டு உடைக்கிறார் கே.கே.பிள்ளை என்கிற வரலாற்று ஆய்வாளர்.
"வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடி புகுந்த பிராமணருக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினர். அவர்களுக்குத் தனி நிலங்களும், முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் அழைக்கப்பட்டன. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் கூட அவற்றினுள் செயல்பட முடியாது. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள்... கட்டணங்கள்... கடமைகள்... ஆயங்கள்... என அனைத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டன" என்று சோழர்களது கல்வெட்டுக்களில் இருந்தே எடுத்துக் காட்டி அம்பலப்படுத்துகிறார் கே.கே.பிள்ளை.
நிலமும் இலவசம்... வரிகளும் கிடையாது... கட்டணங்களும் இல்லை... அரசன் கூட கேள்வி கேட்க முடியாது... ஆனால் அதே சோழ சாம்ராஜ்ஜியத்தில் மற்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்களாம்? அதற்கும் இருக்கிறது கல்வெட்டு.
வேதம் ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பிறதொழில் செய்வோர் மீது கடுமையான வரிகளை விதித்தது. இவற்றுள் அடித்தள எளிய மக்களான சலவையாளர்கள், குயவர், தறி நெய்பவர், தட்டார், ஓடங்களைச் செலுத்தியோர் மீது முறையே... வண்ணார்பாறை பயன்பாட்டு வரி... குசக்காணம்... தறிக்கூரை... தட்டார்பாட்டம்... என வரி மேல் வரி போட்டுத் தள்ளியதோடு நிறுத்தாமல் உழவர்கள் ஒரு பயிருக்கு ஊடாக இன்னொரு பயிரை வளர்த்தால்கூட அதற்கும் ஊடுபோக்கு என வரி போட்டு பரிபாலனம் செய்தவர்கள்தான் இந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ பராக்கிரம ராஜ கெம்பீர மன்னர்கள்.
நிர்வாகமும் நீதியும் இப்படியிருக்க... பெண்கள் நிலை எப்படி இருந்ததாம்? அதற்கும் இருக்கிறது ஆப்பு. எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.
அது சரி... கல்வி?
அதுவும் குலத்துக்கொரு நீதிதான். அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி?
இதையெல்லாம் பாமரன் சொன்னால் தப்பென்று சொல்லலாம். ஆனால் பண்டிதர்கள் சொன்னால்? அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால்? ஆம் தமிழக அரசே வெளியிட்டது. இப்போதல்ல. 1976-ல். அதுவும் தி.மு.க. அரசு! தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனமே "தமிழ் நில வரலாறு" என்கிற நூலை வெளியிட்டது அதன் பதிப்பாசிரியர் கோ.தங்கவேலு. சோழர் கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பொல்லாத காலமாக விளங்கியது என்பதை அக்குவேறாக அலசியது அந்த நூல். பிற்பாடு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இது "பிரம்மதேய ஆலோசகர்" குழுவால் தடை செய்யப்பட்டது.
மன்னர் காலத்தில் ஏன் மார்க்சீயம் வரவில்லை? ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை? என்பது போன்ற கேள்விகளல்ல நமது கேள்விகள்.
ஈழம் வென்றதும்... கடாரம் சென்றதும்... வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான். ஆனால்... தனது குடிமக்களுக்குள்ளேயே ஏன் பாகுபாடு காட்டினான்? ஒரு பக்கம் சுகத்தையும், இன்னொரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன்? இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா?