May 25, 2011

சந்திரபாபுவுக்கு ஏன் எம்.ஜி.ஆரை பிடிக்காது?


ஒரு மனிதன் எல்லோருக்குமே நல்லவனாக இருக்க முடியாது. அது எம்.ஜி.ஆராக இருந்தாலும். அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு அமைச்சர் பெருங்குடி மக்கள் வரை அனைவரின் கண்களுக்கும் வள்ளலாக தெரிந்தவர், சந்திரபாபுவின் கண்களுக்கு மட்டும் ஏன் அப்படி இருக்கவில்லை?

---
குலேபகாவலி ஷூட்டிங்கில் சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவர் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆரை தவிர.

என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர், சிரிச்சா முத்தா உதிர்ந்திரும்?” (எல்லோரையும் மிஸ்டர் என்றுத்தான் அழைப்பார்)

உங்க ஜோக்குக்கு கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்
இதற்கு அவமானமாக உணர்ந்த சந்திரபாபு, மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்துக்கொண்டது. அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்கும் இடம் தேடித்தான் போக வேண்டும்.
அதை பற்றி சந்திரபாபு சொன்னது,

அன்று அவர் வளர்த்துக்கொண்ட அந்த தான் என்ற அகந்தை, இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன்.

---
குலேபகாவலி, புதுமைப்பித்தன் வெற்றிகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர் படங்களில் காமெடிக்கு சந்திரபாபுதான் வேண்டும் என்றார்கள் விநியோகஸ்தர்கள். சந்திரபாபுவின் காமெடிக்காகவே படத்தை பார்க்கலாம் போன்ற பேச்சுக்கள் எம்.ஜி.ஆரின் காதுக்களுக்கு சென்றது.
அதில் இருந்து, “சந்திரபாபு வேண்டாம். அவன் இருந்தால், நான் கால்ஷீட் தரமாட்டேன் என்று எம்.ஜி.ஆர். கூறியதாக வந்த செய்திகள் சந்திரபாபுவுக்கு தெரிய வந்தது.
ஆனால், அதற்கு பிறகும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

---
அடிமைப்பெண் ஷூட்டிங்.
சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் ஏறி குதிப்பதுப்போல் காட்சி. முதலில் ஏறிய சந்திரபாபு, நிலைத்தடுமாறி கீழே விழப்போக, ஜெயலலிதா பிடித்துக்கொண்டார்.
சாப்பாட்டு நேரத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட, சந்திரபாபுவுக்கு மட்டும் வரவில்லை. எம்.ஜி.ஆர். தன்னுடைய சாப்பாட்டை,சந்திரபாபுவுக்கு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் இருந்துவிட்டார். கேட்டதற்கு, பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
ஏன் இப்படி உம்மென்று இருக்கிறார் என்று ஜெயலலிதாவிடம் சந்திரபாபு கேட்டதற்கு, ஜெயலலிதா சந்திரபாபுவை விழாமல் தாங்கி பிடித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாராம்.
இதை கேட்டவுடன் சந்திரபாபுவுக்கு சங்கடமாகிவிட்டதாம். ஏனெனில் சந்திரபாபுவிற்கும், ஜெயலலிதாவின் குடும்பத்திற்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் உண்டு. ஜெயலலிதா சிறுமியாக இருக்கும்போதே, அவர்கள் வீட்டுக்கு சந்திரபாபு செல்வாராம். ஜெயலலிதாவும் அங்கிள் என்று ஓடி வந்து பழகுவாராம்.

---
சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்றொரு படத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர், சம்பளத்தின் ஒரு பகுதியை கருப்பாகவும், மீதியை வெள்ளையாகவும் கேட்டதாக சந்திரபாபு, பின்னர் பிலிமாலயா பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்., பூஜைக்கும் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கும் மட்டுமே வந்திருக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்கவே இல்லை.
நேரே சென்று பேசி பார்க்கலாம் என சென்ற சந்திரபாபுவை, அரை மணி நேரம் கண்ணேதிரே காக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். நான் நடிகன்,நான் கதாசிரியன், நான் வசனகர்த்தா, நான் டைரக்டர் என பெருமைப்பட்ட என்னை, டேய் நீ புரொடக்‌ஷன் பாயும் கூடத்தான் என அப்போது உணர வைத்ததாக கூறியிருக்கிறார் சந்திரபாபு.
கடைசியில் அவரை பார்த்தபோது, கால்ஷீட் பற்றி கேட்டிருக்கிறார். கால்ஷீட் சம்பந்தமாக அண்ணனிடம் பேசிக்கொள்ளும்மாறு எம்.ஜி.ஆர் சொல்ல, அண்ணன் சக்ரபாணியை பார்க்க சென்றார் சந்திரபாபு.
அங்கே அவர்களுக்குள் நடந்த உரையாடல், ஒருகட்டத்தில் முற்றிப்போய்,சேரைத்தூக்கி அடிக்கும் நிலைக்கு போய்விட்டார் சந்திரபாபு. இந்த விஷயம் வெளியே பரவி, படம் நின்று போய், அடமானம் வைத்திருந்த சந்திரபாபுவின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்தது. பெயரும் கெட்டுப்போனது. குடி இன்னும் அதிகமாக, குடி கெட்டது.

---
ஒரு பேட்டியில் சந்திரபாபுவிடம் இப்படி கேட்டார்கள்.
எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.


No comments:

Post a Comment