January 19, 2014

மலரும் நினைவுகள் 5



கடந்த மலரும் நினைவுகள் நான்கு பாகத்திலும் என் வாழ்க்கையில் முதன்முதலில் நடந்தேறிய சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தத்தடவை சற்று மாறுதலாக நம் பெரியோர்கள் சொல்லும் அறிவுரையை செவிமடுக்காமல் இருந்துவிட்டு பின்பு ஒருகாலம் அந்தப் பெரியோர்களையும்,அவர்களின் அறிவுரைகளையும் நினைத்துப் பார்க்கும் எனக்கும், என் போன்றோருக்கும்,முக்கியமாக தங்கள் தாய்நாட்டில் வாழும் எம் தமிழ் இளையதலைமுறையினருக்கும் இந்த மலரும் நினைவுகள் சமர்ப்பணம்.................
1976
ம் எமது பாடசாலையின் உப அதிபர் அவர் பணியிலிருந்து இளைப்பாறுவதையிட்டு அவருக்கு நடந்த பிரியாவிடை வைபவத்தின்போது பெரும்திரளாக சனங்கள் குழுமியிருந்த அந்த மண்டபத்தினுள் உப அதிபர் தன்கரங்களைக் கூப்பி சிரித்தபடி நுழைகிறார்....... குழுமியிருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைகளைத்தட்டி அவரை வரவேற்கிறார்கள்...........

அப்போது யாரும் எதிர்பார்த்திராத ஒரு இனிமையான ஆரம்ப இசையுடன் அர்த்தங்கள் நிறைந்த அற்புதமான புத்தம்புதிய கானம் மண்டபமே அதிரும்வண்ணம் ஒலிக்கிறது.மற்றவர்கள் ரசித்தார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் சிறுவனாக இருந்த என் மனதில் அது கல்லின்மேல் எழுத்தாக பதிந்தேவிட்டது எனலாம். பின்பு மேடையேறிப் பேசிய அந்த உப அதிபர் தனது பேச்சின் போது அந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ள கருத்தினை சுருக்கமாக சொன்னார் ஆனால் பெரும்பாலானவர்கள் அதை காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.எனக்கு என்னவோ அந்தப்பாடல் மறக்கமுடியாத ஒரு பாடலாகவே மனதில் பதிந்துவிட்டது. அவன் ஒரு சரித்திரம் என்ற படத்தில் கவியரசு கண்ணதாசன் கவி புனைய மெல்லிசைமன்னன் விஸ்வநாதன் இசை மீட்டிட சௌந்தரராஜன்,சுசீலா குரல்கொடுக்க உருவானது இந்தக்கானம்.இந்தப்படம் இலங்கையில் திரையிடப்படாததால் தான் என்னவோ இப்பாடல் இலங்கை வானொலியிலோ,ஒலிபெருக்கிகளிலோ மிகமிக அரிதாகவே கேட்டிருக்கிறேன்.அப்பன் இல்லாதுவிட்டால் தான் அப்பனின் அருமை தெரியும் உப்பு இல்லாது விட்டால் தான் உப்பின் அருமை தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு.அதுபோல் நாம் எமது தாய்மண்ணில் வாழும் போது அந்த மண்ணின் மகிமை, எமது பண்பாடு கலாச்சாரம் போன்றனவற்றின் அருமைபெருமைகளை ஒரு அந்நியமண்ணில் வந்து வாழும் போதே உணருகின்றோம். எந்த ஒரு மனிதனும் அவன் சொந்த மண்ணில் வாழ்வது தான் ஒரு கௌரவமான வாழ்க்கை என்பது அந்நிய நாட்டில் வாழும் நான் பட்டறிந்த உண்மையாகும்.இந்தப்பாடலிலும் மேலைநாட்டுக்கு சென்று படித்து தன் தாய்நாட்டுக்கு திரும்பிவரும் பெண்ணை மேலைநாட்டுப் பாணியில் வரவேற்கும் மேலைநாட்டு நாகரிகமோகம் கொண்ட கூட்டத்தினருக்கு மேலைநாட்டு அலங்கோலத்தையும் நம் நாட்டு அன்பையும் ஒப்பிட்டு சொல்கிறாள். "வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள் எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலன்கள் அன்புத் தெய்வங்கள் இன்பச் செல்வங்கள் ஆடும் கலையாகுமோ பாடும் தமிழாகுமோ" மேலும்"அன்னைத் தாய்ப்பாலை பிள்ளைக்குக் கொடுத்து அன்புத் தாலாட்டுப் பாட்டொன்று படித்து காணும் அழகென்ன தேடும் சுகமென்ன சொல்ல மொழி இல்லையே பேச விலை இல்லையே" இதற்கு மேலும் எம் தமிழினத்தின் சிறப்பை எடுத்துக் கூற வார்த்தைகள் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்?????????????????????

பாடலைப்போலவே பாடல்காட்சியில் நடிகர்திலகம் சிவாஜி கணேசனும் காஞ்சனாவும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.வணக்கம் என்று சொல்வதையே அநாகரிகம் என்று கருதி ஹாய் என்று சொல்லும் காவாலிகளே கவனத்தில் கொள்ளுங்கள். 


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

January 18, 2014

மலரும் நினைவுகள் 10

மலரும் நினைவுகளை நீண்டகாலமாக காணவில்லை என பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் மீண்டும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பாகம் பத்தாவதில் பதிவு செய்வதில் பேருவகை அடைகிறேன். நாம் எம் உயிரிலும் மேலாக நேசிக்கும் எம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிதைவு என்பது அது தோன்றிய இடம் என்று சொல்லப்படும் தாய் தமிழகத்தில் ஆரம்பித்து மெல்ல மெல்ல இப்பூமிப்பந்தில் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் வியாபித்து நிற்கிறது.இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,உண்மைக்காரணம் யாதெனில் தாய்த்தமிழகத்தில் இருந்து வெளிவரும் திரைப்படங்களும்,ஊடகங்களும்(குறிப்பாக தொலைக்காட்சிகள்)ஆகும்.எமது மொழியின் சிதைவு கண்டு கலங்கும் அன்பு நெஞ்சங்களுக்கு சிறிது ஆறுதலான செய்தி இது. எனது முதலாவதுவெளிநாட்டுப்பயணமும்,விமானப்பயணமும் ஒரு தமிழ் மணம்வீசும் மண்ணை நோக்கியதாகவே இருந்தது.ஆம் 1989இல் அழகும்,சுத்தமும் நிறைந்த சிங்கப்பூர் சென்றேன்.முதலில் நெஞ்சைஅள்ளும் அழகுமிக்க விமான நிலையத்தை பார்த்தவுடன் பிரமித்துப் போனேன்.தொடர்ந்து ஒரு வாடகை வண்டியில் நான் போய் தங்கவிருக்கும் விடுதியை நோக்கிப் போனேன். அந்த வண்டியை ஓட்டிச்சென்ற நபர் ஒரு சீன இனத்தவர்.

ஆரம்பத்தில் அவர் ஆங்கிலத்தில் சிறிது உரையாடிவிட்டு அமைதியாகி விட்டார்.ஓடிடும் மேகங்கள் தொட்டுச் செல்வது போல் வானளாவ ஓங்கிய கட்டிடங்கள்,நேர்த்தியான சாலைகள்,நேராக ஊர்ந்துசெல்லும் வாகனங்கள்,அழகிய சீனத்து சிட்டுக்கள் என்று பல வண்ணவண்ணக் காட்சிகளைப் பார்த்து ரசித்தபடியே பிரயாணம் தொடர்ந்தது.இதை நான் ஆர்வமாக ரசித்துப் பார்க்கக் காரணம் ஏற்கனவே பல திரைப்படங்களில் சிங்கப்பூரை பார்த்தபடியால் தான்.மனதிற்கு இதம்தரும் ரம்மியமான காட்சிகளை ரசித்தபடியால் தான் என்னவோ திடீரென அங்கே படமாக்கப்பட்ட ஒரு பாடல்காட்சி நினைவுக்குவர அப்பாடலை நான் மெதுவாகப் பாடத் தொடங்கினேன்.பாடி முடிந்ததும் "பாட்டு முடிந்ததா"என்று ஒரு குரல் கேட்டது.நான் திகைத்துப் போய் அக்கம்பக்கம் பார்த்தேன்.நாம் இருவரை தவிர அந்த வண்டியில் யாருமே இல்லை.அந்த சீன சாரதி பலமாக சிரித்தான்.எனக்கு ஆச்சரியமாகவும்,அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பின்பு நான் இறங்கும்வரை அவன் என்னுடன் தமிழில் உரையாடியபடியே வந்தான்.மிகக் குறைந்த தமிழர்கள் வாழும் நாட்டில் வேறொரு இனத்தவன் சுத்தத் தமிழில் பேசும்போது தமிழர்களாகிய நாம் எதற்காக ஆங்கிலத்திலும்,தமிங்கிலத்திலும் பேசவேண்டும்???? 

இப்பாடலுக்கும்,நான் சந்தித்த அனுபவத்திற்கும் ஒற்றுமை என்னவென்றால் இப்பாடலில் நாயகனோ நாயகி வேறு இனத்துப்பெண் என நினைத்து அவள் அழகில் மயங்கி அவளின் அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்துப் பாடுகிறான். பாடல் முடிந்தபின்புதான் நாயகனுக்குத் தெரிகிறது நாயகியும் ஒரு தமிழ்ப் பெண் என்று.1970 க்களில் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த கனவுக்கன்னி மஞ்சுளாவின் அழகினை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 
ரசித்துப் பாடும் காட்சி என்றால் மேற்கொண்டு நான் விபரிக்கவேண்டுமா???கவியரசு கண்ணதாசனின் கவிதைக்கு மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் இசைமீட்ட அவன்தான் மனிதன் என்ற படத்தில் சௌந்தரராஜன் பாடுகிறார்.

உலகத்தை விலைபேசவந்த சிலையை,ஊடல் எனும் கலையை,ஓவியச் சீமாட்டியை,ஓசைதரும் மணியை,ஒருதரம் நாமும் பார்த்து ரசிப்போமா நண்பர்களே.....................................


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

மலரும் நினைவுகள் 9


பலருக்கு தம்வாழ்நாளில் மறக்கவேமுடியாத நாட்கள் எனப் பல உள்ளன.திருமணநாள்,அன்புக்குரியவர்களின் இறந்தநாள்,அன்புக்குரியவர்களின் பிறந்தநாள்,மிகவும் சந்தோசமான சம்பவம் நடந்தநாள் அல்லது மிகவும் சோகமான சம்பவம் நடந்தநாள் எனப் பல உள்ளன.என் வாழ்விலும் அப்படிபல இருந்தாலும் மிகமிக முக்கியமான மறக்கமுடியாதநாள் என்றால் இன்றுதான்.காரணம் இன்றையதினம் நான் மிகவும் ஏமாற்றப்பட்டு அதனால் கூனிக்குறுகி நின்றநாள் ஆகும்.ஆம்,இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன் 01.04.1983 அன்று அதாவது முட்டாள்கள் தினமன்று நான் முட்டாள் ஆக்கப்பட்டநாள்.பாடசாலையில் படிக்கும்போது கூடப்படிக்கும் நண்பன் ஒருவனுக்கும் வேறொரு வகுப்புப் படிக்கும் மாணவிக்கும் இடையே பலவருடங்களாக காதல்.அவர்களின் பெற்றோர்கள்,உடன்பிறப்புகளின் எதிர்ப்பையும் எல்லாம் சமாளித்து அவர்களின் காதல்பயணம் தொடர சகமாணவர்களாகிய நாம்தான் திரைப்படங்களில் வருவதுபோல் முன்னின்று செயல்பட்டோம்.தூதுபோவது,தகவல்பரிமாற்றம் செய்தல்,ஆபத்து நேரங்களில் உதவுதல் போன்றன.இன்பம் நிறைந்த பாடசாலை வாழ்க்கை முடிந்தபின்பும் அவர்களின் காதல்பயணம் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டதால் அவர்களுடனான தொடர்புகள் குறைந்துவிட்டன.இப்போது உள்ளதுபோல் கைத்தொலைபேசி வசதிகள் எதுவுமில்லை அப்போது.எதிர்பாராதவிதமாக எங்கேயாவது சந்தித்தால் மட்டும் உண்டு.அல்லது வீட்டுவாசலில் போய்நின்று மிதிவண்டியில் உள்ள மணியை அடித்து நண்பர்களை அழைத்துப் பேசுவோம்.பாடசாலையில் படிக்கும்போதும் சரி வெளியேறிய பின்பும் சரி நாம் எங்கு போனாலும் சேர்ந்தே போவதுண்டு.


14.01.1964 இல் தைப்பொங்கலன்று தமிழகத்தில் வெளியானதுதான் பெரும் பணத்தைக்கொட்டி மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்ட கர்ணன் என்ற திரைப்படம்.இது ஈழத்தில் வெளியான போது சிறுவனாக இருந்தபடியால் அதைப் பார்க்கவில்லை.அதைவிட அது வெளியானது பற்றி எதுவுமே நினைவில்லை.மீண்டும் 14.01.1983 இல் தைப்பொங்கலன்று யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டு மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது.மகாபாரதக்கதையினை கொஞ்சம் அறிந்திருந்தபடியினால் எனக்கும் அதை உடனே பார்க்கவேண்டுமென்ற ஆவல் இருந்தது.ஒருநாள் யாழ்ப்பாணத்திற்கு வேறு ஒரு அலுவலாகப் போனபோது கர்ணன் படத்தை நான் தனியாக போய் பார்த்துவிட்டேன். எமது நண்பர்கள் வட்டத்தில் உள்ள ஒருவரின் நண்பனும் இதே படத்தைப் பார்த்துவிட்டு என்னுடன் (வெவ்வேறு மிதிவண்டியில்) வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது இருவரும் படம் பற்றிப் பேசிக்கொண்டே வந்தோம்.நான் அதிகமாகப் பேசியது அதில் வந்த ஒருபாடலும்,பாடல் காட்சியும் பற்றியது தான்.இவர் மூலமாக நான் தனியப் போய் படம் பார்த்தசெய்தி எனது நண்பர்களுக்கு எட்டிவிட்டது.இவன் எங்களுக்கு சொல்லாமல் போய்ப் பார்த்துவிட்டானே என்ற கோபத்தில் அவர்கள் என்னைப் பழிதீர்க்க வேண்டும் என்று பெரிய திட்டம் ஒன்றினைத் போட்டுக் காத்திருந்தனர்.

01.04.1983 ஒரு வெள்ளிக்கிழமையன்று எமது அயல்வீட்டில் 16 வயதான பையை ஒருவன் புற்றுநோயினால் இறந்துவிட்டான்.இதனால் நான் உட்பட எங்கள் ஊரே சோகத்தில் மூழ்கியிருந்த வேளையில் ஏதோ அதிரடிப்படையினர் வந்தது போல் என் வீட்டு வாசலில் வந்து இறங்கினார்கள் எனது பள்ளி நண்பர்கள்.ஏற்கனவே நான் குறிப்பிட்ட காதல்ஜோடிகளுக்கு" படங்களில் வருவதுபோல் இருவீட்டில் இருந்தும் பிரச்சனைகள் உருவாகி அடிதடி,கைகலப்பு வரை வந்துவிட்டது.இதனால் அந்த ஜோடிகள் வீட்டைவிட்டு ஓடிவந்து தங்குவதற்கு இடமின்றி யாழ்ப்பாணத்தில் ஒருகடையினில் நிற்கிறார்கள் நாம் எல்லோரும் அங்கே போகிறோம் நீயும் சேர்ந்து வரவேண்டும்" என்றார்கள்.நான் இந்த மரணச் செய்தியைசொல்லி மிகவும் குழம்பிப் போய் இருக்கிறேன் தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக்கூத்தாடிக் கேட்டுப் பார்த்தேன்.அவர்கள் விடவேயில்லை.நீயும் ஒரு நண்பனா உனக்கும் ஒரு துன்பம் வரும் தானே பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி மிரட்டி என்மனதினை மாற்றி என்னை சம்மதிக்கச் செய்தனர்.மனதில் சோகம் அதனால் வந்த குழப்பத்தினால் அன்று முட்டாள்கள் தினம் என்ற நினைப்பு சுத்தமாகவே இல்லை.எல்லோரும் மிதிவண்டியில் இரவுநேரம் யாழ்பாணத்தை நோக்கிப் போகிறோம்.ராஜா திரையரங்கின் முன் என்னையும் இன்னொருவரையும் நிறுத்திவிட்டு மற்றவர்கள் கடையில் நிற்கும் அந்தக் காதல்ஜோடியை அழைத்து வருவதாகச் சொல்லிப் போய்விட்டார்கள்.அப்போது அரங்கின் உள்ளே கர்ணன் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.அதில் நான் மிகவும் விரும்பி ரசித்த பாடல் திரையினில் ஒலிக்கத் தொடங்கவும் அழைத்துவருவதாக சொல்லிவிட்டுப்போன அனைவரும் சற்றுத்தள்ளி ஒழித்துநின்றுவிட்டு சேர்ந்துபாடிக்கொண்டு திடீரென என்முன் வந்து நின்றார்கள்.(ஓடிப்போனதாகச் சொல்லப்பட்ட காதலன் உட்பட)எனக்கு ஒரே அதிர்ச்சி........திகைப்பு..........

ஏன் இப்படி என்றே புரியவில்லை நண்பர்கள் சொல்லித்தான் இன்று முட்டாள்கள் தினம் என்று தெரிந்துகொண்டேன்.எனக்கு வந்த கோபத்தையும்,ஆத்திரத்தையும் அடக்கவே முடியவில்லை.எல்லோரையும் கண்டபடி திட்டிப் பேசிவிட்டு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு படுவேகமாக வீடு வந்துசேர்ந்துவிட்டேன்.இரண்டு வருடங்கள் கழித்து உண்மையாகவே அந்த ஜோடிகள் வீட்டாரின் எதிர்ப்பினால் ஐரோப்பியநாடு ஒன்றுக்கு ஓடிவந்து விட்டார்கள்.அது மட்டுமல்ல இப்போது அவர்கள் தாத்தா,பாட்டி ஆகியும் விட்டார்கள்....................................

பாடலின் கருத்து என்பது, காதல் வயப்பட்ட பெண்ணின் ஏக்கம்!!! இப்பாடலுக்கு அமைந்த இசை,வெகு சிறப்பு கர்ணனில் எல்லாப் பாடல்களுமே பிரமாதம். குறிப்பாகப் இப்படப் பாடல்கள் யாவும் இந்துஸ்தானி இசையில் அமைந்தது.வீணை, மிருதங்கம்;வயிலினுடன், வட இந்திய காற்றிசை வாத்தியமான செனாய்; மற்றும் சாரங்கியும் இதில் கச்சிதமாக இசைத்து மகிழ்வூட்டுகிறது.என்றும் கேட்க இனிக்கும் பாடல் சுசிலா குழுவினரின் கொஞ்சும் குரலினை பாராட்டியே ஆகவேண்டும். 

ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்


எந்த பெண்ணுமே உறுதிமொழி கேட்டு தான் தன்னை எவனிடமும் கொடுப்பாள் அவளுக்கு ஈடாக அவனது வார்த்தை. இவள் அதைக் கேட்காமலே தன்னை கொடுத்து குறைத்துக்கொண்டாள் தன்னுடலையா? சிறப்போ சிறப்பு..........கவியரசரும் மெல்லிசை மன்னரும் மத்யமாவதி ராகத்தில் கூடிக் களித்த பாட்டு இது. சுருங்கச் சொன்னால் இது கேட்கத் திகட்டாத கானம்.தேவிகா குழுவினரின் நடிப்பினை நான் சொல்லவேண்டுமா பாடல்காட்சியைப் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.



நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

மலரும் நினைவுகள் 8



1978ம் ஆண்டு இலங்கை,இந்திய கூட்டுத்தயாரிப்பில் உருவான தமிழ்ப்படம் "பைலட் பிரேம்நாத்" கதாநாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கதாநாயகியாக சிங்கள திரைவானில் அப்போதைய மகாராணியான மாலினி பொன்சேகாவும் நடித்தனர்.இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெரும்பாலும் இலங்கையிலேயே அதுவும் சிங்கள பிரதேசங்களில் நடைபெற்றன.இது சம்பந்தமான செய்திகள் அப்போது தமிழ் ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக வெளிவந்தன. இதைவிட இந்தப்படத்தின் பாடல்களோ மிகவும் பிரபலமாக திக்கெட்டிலும் ஒலித்தபடி இருந்தது. இதனால் இப்படம் எப்போது வெளிவரும் பார்க்கலாம் என்று எல்லோரும் மிக ஆவலோடு காத்திருந்தனர். படமும் 1979 ஆங்கில புத்தாண்டன்று கவர்சிகரமான விளம்பரங்களுடன் கோலாகலமாக வெளிவந்தது.யாழ்ப்பாணத்தில் வின்சர் திரையரங்கில் திரையிடப்பட்டது.

 
அப்போது தொலைக்காட்சி இல்லை, படம் என்றால் திரையரங்கத்திற்கு போனால் தான் உண்டு. அதுவும் வருடத்தில் ஒன்று,இரண்டு பார்க்கத்தான் பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். அதுவும் சும்மா காசைத்தந்து இந்தா மகனே படம் பார்த்துவிட்டுவா என்று சொல்லமாட்டார்கள். 

அவர்களின் மனம் சந்தோசப்படும்படியாக நாம் ஏதாவது செய்தால் மட்டுமே உண்டு.அந்தவகையில் 1978 மார்கழி மாதம் பத்தாவது வகுப்பு அதாவது சாதாரண தரம் இறுதிப் பரீட்சை நடைபெற்று அதன் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம்.காரணம் அதில் சித்தியடைந்தால் பைலட் பிரேம்நாத் பார்க்கலாம்.பங்குனி மாதமளவில் முடிவுகளும் வந்தது.எங்கள் நண்பர்கள் வட்டத்தில் உள்ள அனைவரும் சித்தியடைந்துவிட்டனர்.இந்த நண்பர்கள் வட்டம் என்பது பாடசாலை ரீதியாக இல்லாமல் பல ஊர்கள் ரீதியானது.இதில் பல்வேறு பாடசாலைகளை சேர்ந்தவர்களும் உள்ளனர்.மாலைவேளைகளில் மதில்கள் மேல் இருந்துகொண்டே எங்கள் மகாநாடுகள் நடைபெறும்.அதில் இந்தப்படம் பார்ப்பது பற்றிய மகாநாடு பல நாட்கள் முடிவுகள் எட்டப்படாமல் நடைபெற்றது.இறுதியாக படம் எப்படி கோலாகலமாக வெளிவந்ததோ அதுபோலவே நாமும் கோலாகலமாக கொண்டாடிப்பார்ப்பது என்ற முடிவு எட்டப்பட்டது.என்ன அது கோலாகலமாக பார்ப்பது என்பது????..............

சுன்னாகத்தில் இருந்து நான்காவது தரிப்பிடமான யாழ்ப்பாணத்திற்கு தொடரூந்தில் போக இருபது நிமிடங்கள் ஆகும். இந்த நேரஅளவு மிகச்சிறியது இதனால் நாம் கும்மாளம் அடிக்கும் நேரமும் குறையும்.எனவே சுன்னாகத்தில் இருந்து மற்ற மார்கத்தில் உள்ள இறுதித் தரிப்பிடமான காங்கேசன்துறைக்கு போய் அங்கிருந்து திரும்பவும் சுன்னாகம் ஊடாக யாழ்ப்பாணம் போவது என்று முடிவானது.அதுவும் சும்மா அமைதியாக இருந்து போவதுமில்லை.தாரை,தம்பட்டம்,ஆட்டம்,பாட்டு என்று ஒரே அமர்க்களம்.அதைவிட எல்லோரும் பெரிய ரோமியோ என்ற நினைப்பில் புதிய உடைகள்,கறுப்புக் கண்ணாடி போன்றனவற்றை இதற்கென வேண்டி அணிந்துகொண்டு கலாதியாகப் புறப்பட்டோம்.இதில் இருவர் என்ன செய்தார்கள் என்றால் வரும்போது சுன்னாகம் சந்தைக்குப் போய் விற்பனைக்கு உதாவாது என்று கழித்துவிட்ட அழுகிய தக்காளிப்பழங்கள் பலவற்றை ஒரு பையினுள் எடுத்துவந்தனர்.எதற்காகதொடரூந்து ஓடிக்கொண்டு இருக்கும்போது வெளியில் தென்படுவோருக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு எறிவதற்கு.நானும் வேறு சிலரும் இது வேண்டாம்,விபரீதத்தில் போய் முடியும் என்றோம் ஆனால் அவர்கள் கேட்கவில்லை.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு செல்லும் "யாழ்தேவி" என்று அழைக்கப்படும் கடுகதியில் ஏறினோம்.அதில் கொழும்பு செல்லும் பிரயாணிகள் நிறைந்திருந்தனர்.அந்தக் கடுகதி சுன்னாகம்,கோண்டாவில் அடுத்தது யாழ்ப்பாணம்.எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட மாட்டாது.இந்தத் தைரியத்தில் தெருவில் தென்படுவோருக்கு எல்லாம் அழுகிய தக்காளிப்பழ அபிசேகம் நடந்தவண்ணம் இருந்தது.அதும் யாரும் நடந்து வருவதைக் கண்டால் "தெருவினில் ஒரு வனதேவதை வருகிறது",மிதிவண்டியில் யாரும் வருவதைக் கண்டால் "சைக்கிளில் ஒரு வனதேவதை வருகிறது" எனச் சொல்லி அவர்களுக்கு ஏறிவிழும்.இந்த வனதேவதைக்கு விளக்கம் வேண்டுமென்றால் கீழே வரும் பாடல்காட்சியை பாருங்கள்.ஒருபுறம் ஆட்டம்,பாட்டு மறுபுறம் தக்காளி வீச்சு நடந்தபடி தொடரூந்து யாழ்ப்பாணத்தை அண்மித்துவிட்டது.நாம் இறங்கும் இடம் அண்மித்துவிட்டது நிறையத் தக்காளிப் பழங்கள் உள்ளன எனவே இனியும் இதை வைத்திருந்து பலனில்லை என நினைத்து யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மைதானத்தில் நிறைய மாணவிகள் உடல்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு நின்றனர்.இதைக்கண்டதும் தக்காளிப்பழங்கள் சரமாரியாக அவர்களைப் பதம் பார்த்தது.மாணவிகளின் வெள்ளை சீருடை சிவப்பாக மாறிவிட்டது.அதேநேரம் தொடரூந்துப்பாதை திருத்தும் வேலை நடைபெறுவதால் அது கொஞ்சம் மெதுவாகவே சென்றது.திருத்தும் வேலையாட்கள் ஓரமாக நின்றனர்.இந்த ரோமியோக்களின் சேட்டைகளை பார்த்தும் விட்டனர்.என்ன கஷ்டகாலமோ தெரியவில்லை சமிக்கை விழாததால் தொடரூந்து நின்றுவிட்டது.நின்றதும்தான் தாமதம் தடிகள்,பொல்லுகளுடன் தொடரூந்தினுள் ஏறிவிட்டனர் அந்த வேலையாட்கள்.பின்பு சொல்லவும் வேண்டுமா..... தர்மஅடி...சொல்லிவேலையில்லை.....

எல்லோரும் சிதறுண்டு ஓட்டம்.சிலர் வெளியில் இறங்கியும் ஓடிவிட்டனர்.நானும் வேறு சிலரும் கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டதால் தப்பித்தோம்.சமிக்கை விழுந்து தொடரூந்து புறப்படத் தொடங்கியதும் தந்த தர்மஅடிகாரர்கள் இறங்கிப் போய்விட்டனர்.அத்துடன் ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கிவிட்டது.கோலாகலம் என்று புறப்பட்டு அலங்கோலமாக வின்சர் திரையரங்கம் சென்றடைந்தோம்.இந்தப்பாடல் காட்சியைப் பார்த்த பின்பேஅந்த வனதேவதை என்ற சொல்லின் அர்த்தம் புரிந்தது எனக்கும்.படம் பார்த்துமுடிந்து வெளியே வரும்போதுதான் தொடரூந்தை விட்டு வெளியே ஓடிய வீரர்கள் களைத்து விழுந்து பாதயாத்திரையாக வருகிறார்கள்.பெரிய பாவமாக இருந்தது அவர்களைப் பார்க்க.

கவிஞர் வாலியின் கவிதைவரிக்கு மெல்லிசைமன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இசைமீட்ட பாடலைப் பாடுகின்றனர் சௌந்தரராஜன்,வாணி ஜெயராம். 


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்