January 19, 2014

மலரும் நினைவுகள் 5



கடந்த மலரும் நினைவுகள் நான்கு பாகத்திலும் என் வாழ்க்கையில் முதன்முதலில் நடந்தேறிய சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தத்தடவை சற்று மாறுதலாக நம் பெரியோர்கள் சொல்லும் அறிவுரையை செவிமடுக்காமல் இருந்துவிட்டு பின்பு ஒருகாலம் அந்தப் பெரியோர்களையும்,அவர்களின் அறிவுரைகளையும் நினைத்துப் பார்க்கும் எனக்கும், என் போன்றோருக்கும்,முக்கியமாக தங்கள் தாய்நாட்டில் வாழும் எம் தமிழ் இளையதலைமுறையினருக்கும் இந்த மலரும் நினைவுகள் சமர்ப்பணம்.................
1976
ம் எமது பாடசாலையின் உப அதிபர் அவர் பணியிலிருந்து இளைப்பாறுவதையிட்டு அவருக்கு நடந்த பிரியாவிடை வைபவத்தின்போது பெரும்திரளாக சனங்கள் குழுமியிருந்த அந்த மண்டபத்தினுள் உப அதிபர் தன்கரங்களைக் கூப்பி சிரித்தபடி நுழைகிறார்....... குழுமியிருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைகளைத்தட்டி அவரை வரவேற்கிறார்கள்...........

அப்போது யாரும் எதிர்பார்த்திராத ஒரு இனிமையான ஆரம்ப இசையுடன் அர்த்தங்கள் நிறைந்த அற்புதமான புத்தம்புதிய கானம் மண்டபமே அதிரும்வண்ணம் ஒலிக்கிறது.மற்றவர்கள் ரசித்தார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் சிறுவனாக இருந்த என் மனதில் அது கல்லின்மேல் எழுத்தாக பதிந்தேவிட்டது எனலாம். பின்பு மேடையேறிப் பேசிய அந்த உப அதிபர் தனது பேச்சின் போது அந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ள கருத்தினை சுருக்கமாக சொன்னார் ஆனால் பெரும்பாலானவர்கள் அதை காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.எனக்கு என்னவோ அந்தப்பாடல் மறக்கமுடியாத ஒரு பாடலாகவே மனதில் பதிந்துவிட்டது. அவன் ஒரு சரித்திரம் என்ற படத்தில் கவியரசு கண்ணதாசன் கவி புனைய மெல்லிசைமன்னன் விஸ்வநாதன் இசை மீட்டிட சௌந்தரராஜன்,சுசீலா குரல்கொடுக்க உருவானது இந்தக்கானம்.இந்தப்படம் இலங்கையில் திரையிடப்படாததால் தான் என்னவோ இப்பாடல் இலங்கை வானொலியிலோ,ஒலிபெருக்கிகளிலோ மிகமிக அரிதாகவே கேட்டிருக்கிறேன்.அப்பன் இல்லாதுவிட்டால் தான் அப்பனின் அருமை தெரியும் உப்பு இல்லாது விட்டால் தான் உப்பின் அருமை தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு.அதுபோல் நாம் எமது தாய்மண்ணில் வாழும் போது அந்த மண்ணின் மகிமை, எமது பண்பாடு கலாச்சாரம் போன்றனவற்றின் அருமைபெருமைகளை ஒரு அந்நியமண்ணில் வந்து வாழும் போதே உணருகின்றோம். எந்த ஒரு மனிதனும் அவன் சொந்த மண்ணில் வாழ்வது தான் ஒரு கௌரவமான வாழ்க்கை என்பது அந்நிய நாட்டில் வாழும் நான் பட்டறிந்த உண்மையாகும்.இந்தப்பாடலிலும் மேலைநாட்டுக்கு சென்று படித்து தன் தாய்நாட்டுக்கு திரும்பிவரும் பெண்ணை மேலைநாட்டுப் பாணியில் வரவேற்கும் மேலைநாட்டு நாகரிகமோகம் கொண்ட கூட்டத்தினருக்கு மேலைநாட்டு அலங்கோலத்தையும் நம் நாட்டு அன்பையும் ஒப்பிட்டு சொல்கிறாள். "வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள் எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலன்கள் அன்புத் தெய்வங்கள் இன்பச் செல்வங்கள் ஆடும் கலையாகுமோ பாடும் தமிழாகுமோ" மேலும்"அன்னைத் தாய்ப்பாலை பிள்ளைக்குக் கொடுத்து அன்புத் தாலாட்டுப் பாட்டொன்று படித்து காணும் அழகென்ன தேடும் சுகமென்ன சொல்ல மொழி இல்லையே பேச விலை இல்லையே" இதற்கு மேலும் எம் தமிழினத்தின் சிறப்பை எடுத்துக் கூற வார்த்தைகள் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்?????????????????????

பாடலைப்போலவே பாடல்காட்சியில் நடிகர்திலகம் சிவாஜி கணேசனும் காஞ்சனாவும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.வணக்கம் என்று சொல்வதையே அநாகரிகம் என்று கருதி ஹாய் என்று சொல்லும் காவாலிகளே கவனத்தில் கொள்ளுங்கள். 


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment