January 18, 2014

மலரும் நினைவுகள் 9


பலருக்கு தம்வாழ்நாளில் மறக்கவேமுடியாத நாட்கள் எனப் பல உள்ளன.திருமணநாள்,அன்புக்குரியவர்களின் இறந்தநாள்,அன்புக்குரியவர்களின் பிறந்தநாள்,மிகவும் சந்தோசமான சம்பவம் நடந்தநாள் அல்லது மிகவும் சோகமான சம்பவம் நடந்தநாள் எனப் பல உள்ளன.என் வாழ்விலும் அப்படிபல இருந்தாலும் மிகமிக முக்கியமான மறக்கமுடியாதநாள் என்றால் இன்றுதான்.காரணம் இன்றையதினம் நான் மிகவும் ஏமாற்றப்பட்டு அதனால் கூனிக்குறுகி நின்றநாள் ஆகும்.ஆம்,இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன் 01.04.1983 அன்று அதாவது முட்டாள்கள் தினமன்று நான் முட்டாள் ஆக்கப்பட்டநாள்.பாடசாலையில் படிக்கும்போது கூடப்படிக்கும் நண்பன் ஒருவனுக்கும் வேறொரு வகுப்புப் படிக்கும் மாணவிக்கும் இடையே பலவருடங்களாக காதல்.அவர்களின் பெற்றோர்கள்,உடன்பிறப்புகளின் எதிர்ப்பையும் எல்லாம் சமாளித்து அவர்களின் காதல்பயணம் தொடர சகமாணவர்களாகிய நாம்தான் திரைப்படங்களில் வருவதுபோல் முன்னின்று செயல்பட்டோம்.தூதுபோவது,தகவல்பரிமாற்றம் செய்தல்,ஆபத்து நேரங்களில் உதவுதல் போன்றன.இன்பம் நிறைந்த பாடசாலை வாழ்க்கை முடிந்தபின்பும் அவர்களின் காதல்பயணம் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டதால் அவர்களுடனான தொடர்புகள் குறைந்துவிட்டன.இப்போது உள்ளதுபோல் கைத்தொலைபேசி வசதிகள் எதுவுமில்லை அப்போது.எதிர்பாராதவிதமாக எங்கேயாவது சந்தித்தால் மட்டும் உண்டு.அல்லது வீட்டுவாசலில் போய்நின்று மிதிவண்டியில் உள்ள மணியை அடித்து நண்பர்களை அழைத்துப் பேசுவோம்.பாடசாலையில் படிக்கும்போதும் சரி வெளியேறிய பின்பும் சரி நாம் எங்கு போனாலும் சேர்ந்தே போவதுண்டு.


14.01.1964 இல் தைப்பொங்கலன்று தமிழகத்தில் வெளியானதுதான் பெரும் பணத்தைக்கொட்டி மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்ட கர்ணன் என்ற திரைப்படம்.இது ஈழத்தில் வெளியான போது சிறுவனாக இருந்தபடியால் அதைப் பார்க்கவில்லை.அதைவிட அது வெளியானது பற்றி எதுவுமே நினைவில்லை.மீண்டும் 14.01.1983 இல் தைப்பொங்கலன்று யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டு மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது.மகாபாரதக்கதையினை கொஞ்சம் அறிந்திருந்தபடியினால் எனக்கும் அதை உடனே பார்க்கவேண்டுமென்ற ஆவல் இருந்தது.ஒருநாள் யாழ்ப்பாணத்திற்கு வேறு ஒரு அலுவலாகப் போனபோது கர்ணன் படத்தை நான் தனியாக போய் பார்த்துவிட்டேன். எமது நண்பர்கள் வட்டத்தில் உள்ள ஒருவரின் நண்பனும் இதே படத்தைப் பார்த்துவிட்டு என்னுடன் (வெவ்வேறு மிதிவண்டியில்) வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது இருவரும் படம் பற்றிப் பேசிக்கொண்டே வந்தோம்.நான் அதிகமாகப் பேசியது அதில் வந்த ஒருபாடலும்,பாடல் காட்சியும் பற்றியது தான்.இவர் மூலமாக நான் தனியப் போய் படம் பார்த்தசெய்தி எனது நண்பர்களுக்கு எட்டிவிட்டது.இவன் எங்களுக்கு சொல்லாமல் போய்ப் பார்த்துவிட்டானே என்ற கோபத்தில் அவர்கள் என்னைப் பழிதீர்க்க வேண்டும் என்று பெரிய திட்டம் ஒன்றினைத் போட்டுக் காத்திருந்தனர்.

01.04.1983 ஒரு வெள்ளிக்கிழமையன்று எமது அயல்வீட்டில் 16 வயதான பையை ஒருவன் புற்றுநோயினால் இறந்துவிட்டான்.இதனால் நான் உட்பட எங்கள் ஊரே சோகத்தில் மூழ்கியிருந்த வேளையில் ஏதோ அதிரடிப்படையினர் வந்தது போல் என் வீட்டு வாசலில் வந்து இறங்கினார்கள் எனது பள்ளி நண்பர்கள்.ஏற்கனவே நான் குறிப்பிட்ட காதல்ஜோடிகளுக்கு" படங்களில் வருவதுபோல் இருவீட்டில் இருந்தும் பிரச்சனைகள் உருவாகி அடிதடி,கைகலப்பு வரை வந்துவிட்டது.இதனால் அந்த ஜோடிகள் வீட்டைவிட்டு ஓடிவந்து தங்குவதற்கு இடமின்றி யாழ்ப்பாணத்தில் ஒருகடையினில் நிற்கிறார்கள் நாம் எல்லோரும் அங்கே போகிறோம் நீயும் சேர்ந்து வரவேண்டும்" என்றார்கள்.நான் இந்த மரணச் செய்தியைசொல்லி மிகவும் குழம்பிப் போய் இருக்கிறேன் தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக்கூத்தாடிக் கேட்டுப் பார்த்தேன்.அவர்கள் விடவேயில்லை.நீயும் ஒரு நண்பனா உனக்கும் ஒரு துன்பம் வரும் தானே பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி மிரட்டி என்மனதினை மாற்றி என்னை சம்மதிக்கச் செய்தனர்.மனதில் சோகம் அதனால் வந்த குழப்பத்தினால் அன்று முட்டாள்கள் தினம் என்ற நினைப்பு சுத்தமாகவே இல்லை.எல்லோரும் மிதிவண்டியில் இரவுநேரம் யாழ்பாணத்தை நோக்கிப் போகிறோம்.ராஜா திரையரங்கின் முன் என்னையும் இன்னொருவரையும் நிறுத்திவிட்டு மற்றவர்கள் கடையில் நிற்கும் அந்தக் காதல்ஜோடியை அழைத்து வருவதாகச் சொல்லிப் போய்விட்டார்கள்.அப்போது அரங்கின் உள்ளே கர்ணன் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.அதில் நான் மிகவும் விரும்பி ரசித்த பாடல் திரையினில் ஒலிக்கத் தொடங்கவும் அழைத்துவருவதாக சொல்லிவிட்டுப்போன அனைவரும் சற்றுத்தள்ளி ஒழித்துநின்றுவிட்டு சேர்ந்துபாடிக்கொண்டு திடீரென என்முன் வந்து நின்றார்கள்.(ஓடிப்போனதாகச் சொல்லப்பட்ட காதலன் உட்பட)எனக்கு ஒரே அதிர்ச்சி........திகைப்பு..........

ஏன் இப்படி என்றே புரியவில்லை நண்பர்கள் சொல்லித்தான் இன்று முட்டாள்கள் தினம் என்று தெரிந்துகொண்டேன்.எனக்கு வந்த கோபத்தையும்,ஆத்திரத்தையும் அடக்கவே முடியவில்லை.எல்லோரையும் கண்டபடி திட்டிப் பேசிவிட்டு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு படுவேகமாக வீடு வந்துசேர்ந்துவிட்டேன்.இரண்டு வருடங்கள் கழித்து உண்மையாகவே அந்த ஜோடிகள் வீட்டாரின் எதிர்ப்பினால் ஐரோப்பியநாடு ஒன்றுக்கு ஓடிவந்து விட்டார்கள்.அது மட்டுமல்ல இப்போது அவர்கள் தாத்தா,பாட்டி ஆகியும் விட்டார்கள்....................................

பாடலின் கருத்து என்பது, காதல் வயப்பட்ட பெண்ணின் ஏக்கம்!!! இப்பாடலுக்கு அமைந்த இசை,வெகு சிறப்பு கர்ணனில் எல்லாப் பாடல்களுமே பிரமாதம். குறிப்பாகப் இப்படப் பாடல்கள் யாவும் இந்துஸ்தானி இசையில் அமைந்தது.வீணை, மிருதங்கம்;வயிலினுடன், வட இந்திய காற்றிசை வாத்தியமான செனாய்; மற்றும் சாரங்கியும் இதில் கச்சிதமாக இசைத்து மகிழ்வூட்டுகிறது.என்றும் கேட்க இனிக்கும் பாடல் சுசிலா குழுவினரின் கொஞ்சும் குரலினை பாராட்டியே ஆகவேண்டும். 

ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்


எந்த பெண்ணுமே உறுதிமொழி கேட்டு தான் தன்னை எவனிடமும் கொடுப்பாள் அவளுக்கு ஈடாக அவனது வார்த்தை. இவள் அதைக் கேட்காமலே தன்னை கொடுத்து குறைத்துக்கொண்டாள் தன்னுடலையா? சிறப்போ சிறப்பு..........கவியரசரும் மெல்லிசை மன்னரும் மத்யமாவதி ராகத்தில் கூடிக் களித்த பாட்டு இது. சுருங்கச் சொன்னால் இது கேட்கத் திகட்டாத கானம்.தேவிகா குழுவினரின் நடிப்பினை நான் சொல்லவேண்டுமா பாடல்காட்சியைப் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.



நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment