மலரும்
நினைவுகளை நீண்டகாலமாக காணவில்லை என பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதால்
மீண்டும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பாகம் பத்தாவதில் பதிவு செய்வதில்
பேருவகை அடைகிறேன். நாம்
எம் உயிரிலும் மேலாக நேசிக்கும் எம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிதைவு
என்பது அது தோன்றிய இடம் என்று சொல்லப்படும் தாய் தமிழகத்தில் ஆரம்பித்து
மெல்ல மெல்ல இப்பூமிப்பந்தில் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் வியாபித்து
நிற்கிறது.இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,உண்மைக்காரணம் யாதெனில்
தாய்த்தமிழகத்தில்
இருந்து வெளிவரும் திரைப்படங்களும்,ஊடகங்களும்(குறிப்பாக
தொலைக்காட்சிகள்)ஆகும்.எமது மொழியின் சிதைவு கண்டு கலங்கும் அன்பு
நெஞ்சங்களுக்கு சிறிது ஆறுதலான செய்தி இது. எனது
முதலாவதுவெளிநாட்டுப்பயணமும்,வி மானப்பயணமும்
ஒரு தமிழ் மணம்வீசும் மண்ணை நோக்கியதாகவே இருந்தது.ஆம் 1989இல்
அழகும்,சுத்தமும் நிறைந்த சிங்கப்பூர் சென்றேன்.முதலில் நெஞ்சைஅள்ளும்
அழகுமிக்க விமான நிலையத்தை பார்த்தவுடன் பிரமித்துப் போனேன்.தொடர்ந்து ஒரு
வாடகை வண்டியில் நான் போய் தங்கவிருக்கும் விடுதியை நோக்கிப் போனேன். அந்த
வண்டியை ஓட்டிச்சென்ற நபர் ஒரு சீன இனத்தவர்.
ஆரம்பத்தில் அவர் ஆங்கிலத்தில் சிறிது உரையாடிவிட்டு அமைதியாகி விட்டார்.ஓடிடும் மேகங்கள் தொட்டுச் செல்வது போல் வானளாவ ஓங்கிய கட்டிடங்கள்,நேர்த்தியான சாலைகள்,நேராக ஊர்ந்துசெல்லும் வாகனங்கள்,அழகிய சீனத்து சிட்டுக்கள் என்று பல வண்ணவண்ணக் காட்சிகளைப் பார்த்து ரசித்தபடியே பிரயாணம் தொடர்ந்தது.இதை நான் ஆர்வமாக ரசித்துப் பார்க்கக் காரணம் ஏற்கனவே பல திரைப்படங்களில் சிங்கப்பூரை பார்த்தபடியால் தான்.மனதிற்கு இதம்தரும் ரம்மியமான காட்சிகளை ரசித்தபடியால் தான் என்னவோ திடீரென அங்கே படமாக்கப்பட்ட ஒரு பாடல்காட்சி நினைவுக்குவர அப்பாடலை நான் மெதுவாகப் பாடத் தொடங்கினேன்.பாடி முடிந்ததும் "பாட்டு முடிந்ததா"என்று ஒரு குரல் கேட்டது.நான் திகைத்துப் போய் அக்கம்பக்கம் பார்த்தேன்.நாம் இருவரை தவிர அந்த வண்டியில் யாருமே இல்லை.அந்த சீன சாரதி பலமாக சிரித்தான்.எனக்கு ஆச்சரியமாகவும்,அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பின்பு நான் இறங்கும்வரை அவன் என்னுடன் தமிழில் உரையாடியபடியே வந்தான்.மிகக் குறைந்த தமிழர்கள் வாழும் நாட்டில் வேறொரு இனத்தவன் சுத்தத் தமிழில் பேசும்போது தமிழர்களாகிய நாம் எதற்காக ஆங்கிலத்திலும்,தமிங்கிலத்திலும் பேசவேண்டும்????
இப்பாடலுக்கும்,நான் சந்தித்த அனுபவத்திற்கும் ஒற்றுமை என்னவென்றால் இப்பாடலில் நாயகனோ நாயகி வேறு இனத்துப்பெண் என நினைத்து அவள் அழகில் மயங்கி அவளின் அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்துப் பாடுகிறான். பாடல் முடிந்தபின்புதான் நாயகனுக்குத் தெரிகிறது நாயகியும் ஒரு தமிழ்ப் பெண் என்று.1970 க்களில் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த கனவுக்கன்னி மஞ்சுளாவின் அழகினை நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ரசித்துப் பாடும் காட்சி என்றால் மேற்கொண்டு நான் விபரிக்கவேண்டுமா???கவியரசு கண்ணதாசனின் கவிதைக்கு மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் இசைமீட்ட அவன்தான் மனிதன் என்ற படத்தில் சௌந்தரராஜன் பாடுகிறார்.
உலகத்தை விலைபேசவந்த சிலையை,ஊடல் எனும் கலையை,ஓவியச் சீமாட்டியை,ஓசைதரும் மணியை,ஒருதரம் நாமும் பார்த்து ரசிப்போமா நண்பர்களே.....................
நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்
No comments:
Post a Comment