January 18, 2014

மலரும் நினைவுகள் 8



1978ம் ஆண்டு இலங்கை,இந்திய கூட்டுத்தயாரிப்பில் உருவான தமிழ்ப்படம் "பைலட் பிரேம்நாத்" கதாநாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கதாநாயகியாக சிங்கள திரைவானில் அப்போதைய மகாராணியான மாலினி பொன்சேகாவும் நடித்தனர்.இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெரும்பாலும் இலங்கையிலேயே அதுவும் சிங்கள பிரதேசங்களில் நடைபெற்றன.இது சம்பந்தமான செய்திகள் அப்போது தமிழ் ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக வெளிவந்தன. இதைவிட இந்தப்படத்தின் பாடல்களோ மிகவும் பிரபலமாக திக்கெட்டிலும் ஒலித்தபடி இருந்தது. இதனால் இப்படம் எப்போது வெளிவரும் பார்க்கலாம் என்று எல்லோரும் மிக ஆவலோடு காத்திருந்தனர். படமும் 1979 ஆங்கில புத்தாண்டன்று கவர்சிகரமான விளம்பரங்களுடன் கோலாகலமாக வெளிவந்தது.யாழ்ப்பாணத்தில் வின்சர் திரையரங்கில் திரையிடப்பட்டது.

 
அப்போது தொலைக்காட்சி இல்லை, படம் என்றால் திரையரங்கத்திற்கு போனால் தான் உண்டு. அதுவும் வருடத்தில் ஒன்று,இரண்டு பார்க்கத்தான் பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். அதுவும் சும்மா காசைத்தந்து இந்தா மகனே படம் பார்த்துவிட்டுவா என்று சொல்லமாட்டார்கள். 

அவர்களின் மனம் சந்தோசப்படும்படியாக நாம் ஏதாவது செய்தால் மட்டுமே உண்டு.அந்தவகையில் 1978 மார்கழி மாதம் பத்தாவது வகுப்பு அதாவது சாதாரண தரம் இறுதிப் பரீட்சை நடைபெற்று அதன் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம்.காரணம் அதில் சித்தியடைந்தால் பைலட் பிரேம்நாத் பார்க்கலாம்.பங்குனி மாதமளவில் முடிவுகளும் வந்தது.எங்கள் நண்பர்கள் வட்டத்தில் உள்ள அனைவரும் சித்தியடைந்துவிட்டனர்.இந்த நண்பர்கள் வட்டம் என்பது பாடசாலை ரீதியாக இல்லாமல் பல ஊர்கள் ரீதியானது.இதில் பல்வேறு பாடசாலைகளை சேர்ந்தவர்களும் உள்ளனர்.மாலைவேளைகளில் மதில்கள் மேல் இருந்துகொண்டே எங்கள் மகாநாடுகள் நடைபெறும்.அதில் இந்தப்படம் பார்ப்பது பற்றிய மகாநாடு பல நாட்கள் முடிவுகள் எட்டப்படாமல் நடைபெற்றது.இறுதியாக படம் எப்படி கோலாகலமாக வெளிவந்ததோ அதுபோலவே நாமும் கோலாகலமாக கொண்டாடிப்பார்ப்பது என்ற முடிவு எட்டப்பட்டது.என்ன அது கோலாகலமாக பார்ப்பது என்பது????..............

சுன்னாகத்தில் இருந்து நான்காவது தரிப்பிடமான யாழ்ப்பாணத்திற்கு தொடரூந்தில் போக இருபது நிமிடங்கள் ஆகும். இந்த நேரஅளவு மிகச்சிறியது இதனால் நாம் கும்மாளம் அடிக்கும் நேரமும் குறையும்.எனவே சுன்னாகத்தில் இருந்து மற்ற மார்கத்தில் உள்ள இறுதித் தரிப்பிடமான காங்கேசன்துறைக்கு போய் அங்கிருந்து திரும்பவும் சுன்னாகம் ஊடாக யாழ்ப்பாணம் போவது என்று முடிவானது.அதுவும் சும்மா அமைதியாக இருந்து போவதுமில்லை.தாரை,தம்பட்டம்,ஆட்டம்,பாட்டு என்று ஒரே அமர்க்களம்.அதைவிட எல்லோரும் பெரிய ரோமியோ என்ற நினைப்பில் புதிய உடைகள்,கறுப்புக் கண்ணாடி போன்றனவற்றை இதற்கென வேண்டி அணிந்துகொண்டு கலாதியாகப் புறப்பட்டோம்.இதில் இருவர் என்ன செய்தார்கள் என்றால் வரும்போது சுன்னாகம் சந்தைக்குப் போய் விற்பனைக்கு உதாவாது என்று கழித்துவிட்ட அழுகிய தக்காளிப்பழங்கள் பலவற்றை ஒரு பையினுள் எடுத்துவந்தனர்.எதற்காகதொடரூந்து ஓடிக்கொண்டு இருக்கும்போது வெளியில் தென்படுவோருக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு எறிவதற்கு.நானும் வேறு சிலரும் இது வேண்டாம்,விபரீதத்தில் போய் முடியும் என்றோம் ஆனால் அவர்கள் கேட்கவில்லை.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு செல்லும் "யாழ்தேவி" என்று அழைக்கப்படும் கடுகதியில் ஏறினோம்.அதில் கொழும்பு செல்லும் பிரயாணிகள் நிறைந்திருந்தனர்.அந்தக் கடுகதி சுன்னாகம்,கோண்டாவில் அடுத்தது யாழ்ப்பாணம்.எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட மாட்டாது.இந்தத் தைரியத்தில் தெருவில் தென்படுவோருக்கு எல்லாம் அழுகிய தக்காளிப்பழ அபிசேகம் நடந்தவண்ணம் இருந்தது.அதும் யாரும் நடந்து வருவதைக் கண்டால் "தெருவினில் ஒரு வனதேவதை வருகிறது",மிதிவண்டியில் யாரும் வருவதைக் கண்டால் "சைக்கிளில் ஒரு வனதேவதை வருகிறது" எனச் சொல்லி அவர்களுக்கு ஏறிவிழும்.இந்த வனதேவதைக்கு விளக்கம் வேண்டுமென்றால் கீழே வரும் பாடல்காட்சியை பாருங்கள்.ஒருபுறம் ஆட்டம்,பாட்டு மறுபுறம் தக்காளி வீச்சு நடந்தபடி தொடரூந்து யாழ்ப்பாணத்தை அண்மித்துவிட்டது.நாம் இறங்கும் இடம் அண்மித்துவிட்டது நிறையத் தக்காளிப் பழங்கள் உள்ளன எனவே இனியும் இதை வைத்திருந்து பலனில்லை என நினைத்து யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மைதானத்தில் நிறைய மாணவிகள் உடல்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு நின்றனர்.இதைக்கண்டதும் தக்காளிப்பழங்கள் சரமாரியாக அவர்களைப் பதம் பார்த்தது.மாணவிகளின் வெள்ளை சீருடை சிவப்பாக மாறிவிட்டது.அதேநேரம் தொடரூந்துப்பாதை திருத்தும் வேலை நடைபெறுவதால் அது கொஞ்சம் மெதுவாகவே சென்றது.திருத்தும் வேலையாட்கள் ஓரமாக நின்றனர்.இந்த ரோமியோக்களின் சேட்டைகளை பார்த்தும் விட்டனர்.என்ன கஷ்டகாலமோ தெரியவில்லை சமிக்கை விழாததால் தொடரூந்து நின்றுவிட்டது.நின்றதும்தான் தாமதம் தடிகள்,பொல்லுகளுடன் தொடரூந்தினுள் ஏறிவிட்டனர் அந்த வேலையாட்கள்.பின்பு சொல்லவும் வேண்டுமா..... தர்மஅடி...சொல்லிவேலையில்லை.....

எல்லோரும் சிதறுண்டு ஓட்டம்.சிலர் வெளியில் இறங்கியும் ஓடிவிட்டனர்.நானும் வேறு சிலரும் கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டதால் தப்பித்தோம்.சமிக்கை விழுந்து தொடரூந்து புறப்படத் தொடங்கியதும் தந்த தர்மஅடிகாரர்கள் இறங்கிப் போய்விட்டனர்.அத்துடன் ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கிவிட்டது.கோலாகலம் என்று புறப்பட்டு அலங்கோலமாக வின்சர் திரையரங்கம் சென்றடைந்தோம்.இந்தப்பாடல் காட்சியைப் பார்த்த பின்பேஅந்த வனதேவதை என்ற சொல்லின் அர்த்தம் புரிந்தது எனக்கும்.படம் பார்த்துமுடிந்து வெளியே வரும்போதுதான் தொடரூந்தை விட்டு வெளியே ஓடிய வீரர்கள் களைத்து விழுந்து பாதயாத்திரையாக வருகிறார்கள்.பெரிய பாவமாக இருந்தது அவர்களைப் பார்க்க.

கவிஞர் வாலியின் கவிதைவரிக்கு மெல்லிசைமன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இசைமீட்ட பாடலைப் பாடுகின்றனர் சௌந்தரராஜன்,வாணி ஜெயராம். 


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment