January 18, 2014

மலரும் நினைவுகள் 13



கடந்த மலரும் நினைவுகள் 12 க்கு ஆகமொத்தம் நான்கு பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்தபடியால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்த எனக்கு இன்று ஒரு முகநூல் நண்பர் வேட்டி அணிந்து பலகோணங்களில் படம்பிடித்து தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.அதைப் பார்த்ததும் மலரும் நினைவுகளை தொடருவோம் என்று முடிவெடுத்து விட்டேன்.தமிழர்களின் தேசிய உடை என்பதாலோ,என்னவோ தெரியவில்லை பெண்களுக்கு தாவணியும்,ஆண்களுக்கு வேட்டியும் பார்ப்பதற்கு மிகமிக எடுப்பாகவும்,அழகாகவும் இருக்கும்.அந்தவகையில் அந்த நண்பருக்கும் அழகாகவே இருந்தது.அவரின் படங்களைப் பார்த்தால் இந்த வேட்டிக்கட்டு அவருக்கு வெள்ளோட்டம் போல் தெரிகிறது.

இவற்றைல்லாம் பார்க்கும்போது 41 வருடங்கள் பின்னோக்கிப் போய் எனது முதல் வேட்டிக்கட்டு பற்றிய சுவையான சம்பவம் மலரும் நினைவுகளாக உங்கள் முன் வருகிறது.1972 ம் ஆண்டு அப்போது நான் ஒன்பது வயது சிறுவன்.அந்தக்காலத்தில் எங்கள் ஊரான சுன்னாகத்தில் உள்ள எமது குலதெய்வமான அம்மன்கோவிலில் இருந்து தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோவில் பத்தாம் திருவிழா அன்று பஜனை பாடிக்கொண்டு சுமார் இருபது கிலோமீற்றர் பாதயாத்திரையாகப் (1983 ம் ஆண்டு வரை) போவது வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும் வீட்டில் அப்பா,அண்ணாமார் போகும்போது நானும் வருவேன் என்று அழுது அடம்பிடிப்பது வழக்கம்.நீண்ட தூரம் நீ நடக்கமாட்டாய்,அடுத்தவருடம் போகலாம் என்று சாக்குப்போக்கு சொல்லிவிடுவார்கள்.அடுத்தவருடம்... அடுத்தவருடம்... என்று தவணை சொல்லி ஏமாற்றியது போதும் என்று இந்தத் தடவை எப்படியும் என்னைக் கூட்டிக்கொண்டுபோகவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றதால் அவர்களும் இறங்கிவந்து சம்மதித்தனர்.ஆனால் ஒரு நிபந்தனை வேட்டிகட்டிக்கொண்டு வரவேண்டும் என்பதாகும்.வேட்டி என்றதும் சிறிது தயக்கம்,பயம் வந்துவிட்டது என்றாலும் ஒரு அசட்டுத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தலையாட்டி விட்டேன்.

அப்பாவின் சால்வை வேட்டியாக மாறி என் இடுப்பில் வந்து ஒட்டிக் கொண்டது.பெரும் குதூகலத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டேன்.அந்தக் குதூகலம் சிலநிமிடங்களே நீடித்தது.காரணம் சில மீற்றர் தூரம் சென்றதும் ஒருகையை வேட்டியில் பிடித்துக்கொண்டு முதுகை கூனியபடி நடக்கவேண்டிய நிலைமை எனக்கு.சேர்ந்து வந்தவர்கள் சரிசெய்து கட்டிவிட்டனர்.துன்பம் எதற்கு என்று நினைத்து எங்கள் கோயிலில் போய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்துவிட்டேன்.இரண்டு மணியளவில் செல்வச் சந்நிதிக்கு பாதயாத்திரை புறப்பட்டுவிட்டது.ஆரம்பத்தில் சில நூறு பேர்களுடன் ஆரம்பித்து முடியும்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடிவிடுவார்கள்.சுன்னாகத்திலிருந்து ஆரம்பித்து ஏழாலை தெற்கு,ஏழாலை கிழக்கு,ஏழாலை வடக்கு,குப்பிளான்,புன்னாலைக்கட்டுவன்,வசாவிளான்,அச்சுவேலி,தம்பாலை இன்னும் சிறிய ஊர்கள் வழியாக செல்வச்சந்நிதி கோவிலை இரவு பத்து மணியளவில் சென்றடையும் இந்த பஜனைக் குழு.இடையில் பல வீடுகளில் பல கோவில்களில் சிறிதுநேரம் தங்கி உணவு,குடிவகைகளை உட்கொண்டபடியே மிகவும் குதூகலத்துடனும்,பக்திப்பரவசத்துடனும் அடியார்கள் நடந்து செல்வார்கள்.பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.ஆனால் அந்த எட்டு மணிநேரமும் இந்த வேட்டியுடன் நான் பட்டபாடுகளை வார்த்தையில் சொல்லமுடியாது.சிலவேளைகளில் என்னை அறியாமலே அவிழ்ந்து விழுந்ததும் உண்டு.அப்பா பஜனைக் குழுவினருடன் சேர்ந்து பாடிக்கொண்டே வந்தார்.அண்ணாமார் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து போய்விட்டனர்.எனக்கு உதவிசெய்யவென பெரிதாக யாரும் இல்லை.அச்சுவேலியில் எனது பரிதாப நிலையை பார்த்த ஒரு பாட்டி தம்பி இந்த வேட்டியை கழற்றி தலையில் போட்டுக்கொண்டு நட என்றார்.ஒருவாறு செல்வசந்நிதி கோவிலை நெருங்கிவிட்டோம்.

அப்போது இப்ப உள்ளது போல் பாலத்தைக் கடந்து சுற்றி வரவேண்டியதில்லை.காற்றாடி இருந்த இடத்திற்கு அருகே பேருந்து தரிப்பிடம் இருந்தது.அதற்கு குறுக்காக திருவிழாக் காலங்களில் மட்டும் மிகவும் குறுகிய பாலம் கட்டியிருக்கும் அதனூடாக கோயிலை சென்றடையலாம்.நன்றாக இருண்டுவிட்டது காற்றும் பலமாக வீசியது அலைகளும் பலமாக வந்து மோதி நனைத்து விட்டது.சும்மாவே கழன்று விழுகிற வேட்டிக்கு காற்று வேறு.....கோயில் நெருங்குவதால் பஜனையும் சூடு பிடித்துவிட்டது.நான் உடனே ஓடிப்போய் அப்பாவின் கையைப் பிடித்து விட்டேன்.அவரின் ஒருகையில் பஜனைப் புத்தகம்,ஒருகையில் நான்,எனது ஒருகை அப்பாவின் கையோடு,மறுகை கிட்டத்தட்ட முழுவது கழன்றுவிட்டஎனது வேட்டியை பிடித்தபடி எல்லோரின் பார்வையும் சந்நிதியான் மேல் இல்லை.எங்கள்மேல் தான் இருந்தது.நாம் நடந்து போனவிதம் அப்படியொரு கண்கொள்ளாக்காட்சி என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.அதேநேரம் அங்கேயிருந்த கடையில் இருந்து ஒருபாடல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.அப்போது அது மிகவும் பிரபல்யமான பாடல்.நாம் பாலத்தைக் கடந்ததும் எனக்குஅறிமுகமே இல்லாத ஒருவர் சொன்னார் அண்மையில் நான் தமிழகம் போனபோது இப்பாடல் இடம்பெற்ற படத்தினைப் பார்த்தேன்,இப்பாடலில் எம்ஜிஆர்,ஹெலன் ஆடுவது போலவே உங்கள் இருவரின் நடையும் பாலத்தைக் கடக்கும்போது இருந்ததாக சொன்னார்.நடித்தும் காட்டினார்.அங்கிருந்தவர்கள் எல்லோருமே விழுந்து....விழுந்து.... சிரித்தார்கள்.எனவே அழுது,அடம்பிடித்து ஒரு காரியத்தை சாதிக்க முடியாது.மாறாக அவமானத்தையே சந்திக்க நேரிடும்.

சங்கே முழங்கு என்ற படத்தில் கண்ணதாசன் பாடலுக்கு விஸ்வநாதன் இசையமைக்க சௌந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரியும் பாடும் பாடலிது 

  .

நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment